இந்தியாவில் அதிகரித்து வரும் காதல், காமக் கொலைகள்
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த கொலைகளில் அதிக கொலைகளுக்கு காதல் மற்றும் உடல் ரீதியான உறவுகள் ஆகியவை தான் காரணமாக இருந்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்க ஆண்டு நாட்டில் நடந்த கொலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொல்லப்பட்ட 13,448 பேரில் 3,877 பேர் பகை காரணமாக கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சொத்து பிரச்சனை காரணமாக 3,169 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர இதர காரணங்களுக்காக 34,434 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காதல்
காதல் மற்றும் உடல் ரீதியான உறவுகள் காரணமாக மட்டும் நாடு முழுவதும் 2,549 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்கள் வாரியாக
மாநிலங்கள் வாரியாக பார்க்கையில் காதல் மற்றும் உடல் ரீதியான உறவுகள் காரணமாகத் தான் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காரணங்களால் ஆந்திராவில் 445 பேர், உத்தர பிரதேசத்தில் 325 பேர், மகாராஷ்டிராவில் 254 பேர், பஞ்சாபில் 83 பேர், ஜம்மு காஷ்மீரில் 11 பேர், இமாச்சல பிரதேசத்தில் 10 பேர் மற்றும் நாகாலாந்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகம்
தமிழகத்தில் காதல் விவகாரத்தால் மட்டும் 291 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர காதல் விவகாரத்தால் குஜராத்தில் 116 பேரும், டெல்லியில் 54 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

கௌரவக் கொலை
கௌரவக் கொலைகளுக்கு பெயர்போன ஹரியானாவில் காதல் விவகாரத்தில் பலர் கொல்லப்படவில்லை. அந்த மாநிலத்தில் நடந்த கொலைகளில் 218 பேர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில்
கேரளாவில் காதல் விவகாரத்தால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காதல் தொடர்பான கொலைகள் ராஜஸ்தான்(39) மற்றும் மேற்கு வங்கம்(39) ஆகிய மாநிலங்களிலும் குறைவு.

பீகாரில்
பீகாரில் கடந்த ஆண்டு நடந்த கொலைகளில் 32.5 சதவீதம் கொலைகளுக்கு சொத்து பிரச்சனை தான் காரணமாக இருந்துள்ளது. நாட்டிலேயே பீகாரில் தான் முன்விரோதம் காரணமாக அதிகபட்சமாக 570 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு 4,966 கொலைகளும், பீகாரில் 3,566 கொலைகளும் நடந்துள்ளன.

சாதி
அஸ்ஸாமில் சாதி சம்பந்தப்பட்ட காரணங்களால் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வரதட்சணை
வரதட்சணை கொலைகளில் ஒடிஷா(415) மற்றும் மேற்கு வங்கம்(252) ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

அரசியல் கொலைகள்
பீகாரில் 32 பேரும், மத்திய பிரதேசத்தில் 28 பேரும், மேற்கு வங்கத்தில் 22 பேரும் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டில் 240 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு அரசியல் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications