டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறனை கைது செய்ய தடை நீடிப்பு- 30ம் தேதி சிபிஐ முன் ஆஜராக உத்தரவு
டெல்லி: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் சி.பி.ஐ. முன்பு நவம்பர் 30-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தயாநிதி மாறனை சி.பி.ஐ. கைது செய்வதற்கான தடை நீடிக்கிறது.
2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி. ஒளிபரப்புக்குப் பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு 6 வார இடைக்கால முன் ஜாமீன் வழங்கியிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத காரணத்தால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. முறையிட்டது. இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தயாநிதி மாறனுக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மேல்முறையீடு செய்தார்.
இதை ஏற்று தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இவ்வழக்கில் தயாநிதி மாறன் தரப்பும், சி.பி.ஐ. தரப்பும் அடுத்தடுத்து கூடுதல் விளக்கங்களை உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்தன. தயாநிதி மாறனை 'காவலில் வைத்து' விசாரிக்கவும் சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சி.பி.ஐ. விசாரணைக்காக நவம்பர் 30-ந் தேதி தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை தயாநிதி மாறனிடம் சி.பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம். சி.பி.ஐ. அழைக்கும்போதெல்லாம் விசாரணைக்கு தயாநிதி மாறன் செல்ல வேண்டும்.
ஆனால் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற சி.பி.ஐ. கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதாவது தயாநிதி மாறனை கைது செய்து காவலில் வைத்து சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தயாநிதி மாறனை சி.பி.ஐ. கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கிறது.