சர்ச்சை.. காலைக் கடனை ஹாயாக கழிப்போரின் ஆடைகளை அவிழ்க்கும் மாநகராட்சி அதிகாரிகள்!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பொது இடத்தில் மலம் கழிப்போரின் ஆடைகள் அவிழ்க்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
நகர்ப்புறங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க மத்திய அரசு கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்திக்கு முன்பாக இலக்கை எட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் வட இந்தியாவின் பல பகுதிகளிலும், காலைக்கடனை முடிக்கப்போவோரை குறி வைத்து கண்காணித்துவருகிறார்கள் மாநகர ஊழியர்கள்.

லுங்கிகள் அவிழ்ப்பு
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், வெளியிடத்தில் மலம் கழித்த சில ஆண்களை விரட்டி பிடித்த அதிகாரிகள் அவர்களின் கைலிகளை அவிழ்த்துவிட்டுள்ளனர். எவ்வளவு சொல்லியும் கேட்காத அவர்களை அவமானப்படுத்துவதே கடைசி ஆயுதம் என்கிறார்கள் அதிகாரிகள்.

எல்லாம் செய்தும் கேட்பதில்லை
இதுகுறித்து ஜார்கண்ட் நகர வளர்ச்சி துறை அமைச்சர் சி.பி.சிங் கூறுகையில், நடவடிக்கையில் இது ஒரு பகுதி அவ்வளவுதான். தேவைப்படும் இடங்களில் எல்லாம் டாய்லெட் கட்டியுள்ளோம், தண்ணீரை சப்ளை செய்கிறோம். சில இடங்களில் ஏதாவது குறைபாடு இருக்கலாம். ஆனால் அதற்காக திறந்த வெளியை பயன்படுத்துவதை ஏற்க முடியாது.

இனி இப்படித்தான்
மக்களுக்கு பல கட்டங்களாகவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஹெல்மெட் கட்டாயம் என டிராபிக் போலீசார் முதலில் எச்சரித்தனர் பிறகு அபராதம் விதித்தனர். அதுபோலத்தான் நாங்களும் விழிப்புணர்வை கூறிவிட்டோம். இப்போது நடவடிக்கை எடுக்கிறோம். அதில் ஆடைகளை பறிப்பதும் ஒரு நடவடிக்கை. மக்களை துன்புறுத்துவது எங்கள் நோக்கம் இல்லை என்றார்.

பின்வாங்கும் மேயர்
ராஞ்சி மாநகர மேயர் ஆஷா லக்ரா வேறு மாதிரி பேசுகிறார். இதுபோல ஆடைகளை அவிழ்ப்பது சரியில்லை என்றும், அவ்வாறு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். இதுபோன்ற லுங்கி அவிழ்ப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications