திரிபுராவில் வென்ற பாஜக... ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் தியோதரின் 4 ஆண்டுகால வியூகத்தின் வெற்றி
திரிபுராவில் அமைப்பு பலமே இல்லாத சூழலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியிருப்பதன் பின்னணியில் இருப்பவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் தியோதர்.
அகர்தலா: திரிபுராவில் 25 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சிக்கு முடிவுரை எழுதியிருக்கிறது பாஜக. பாஜகவின் இந்த விஸ்வரூப வெற்றிக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சுனில் தியோதர்தான்.
1985-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார் மும்பையைச் சேர்ந்த சுனில் தியோதர். பின்னர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பாஜகவுக்காக பல தேர்தல்களில் பொறுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
1991-ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக நியமிக்கப்பட்டார். பின்னர் நிதின் கட்காரி பாஜக தலைவராக இருந்த வடகிழக்கு மாநிலங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளரானார் தியோதர்.
2014-ல் திரிபுரா பொறுப்பாளர்
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதி பொறுப்பாளராக இருந்தார். அதே ஆண்டில் திரிபுரா தேர்தல் பொறுப்பாளராக சுனில் தியோதரை களமிறக்கினார் அமித்ஷா. இதையடுத்து அகர்தலாவிலேயே தங்கி பாஜகவுக்கான அமைப்பு பலத்தை கட்டமைக்கும் பணிகளை அவர் முதலில் மேற்கொண்டார்.
பழங்குடி மொழி
இதற்காக திரிபுரா பழங்குடி மக்களின் மொழியை நன்கு கற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கனவே வங்க மொழியும் நன்கு பேச தெரியும். தியோதர் முதலில் குறிவைத்தது பிற கட்சியினரைத்தான். குறிப்பாக காங்கிரஸ் கட்சி தொண்டர்களை பாஜகவுக்கு கொண்டுவருவதில் தியோதர் முனைப்பு காட்டினார்.
தொடர் போராட்டங்கள்
பாஜகவை அமைப்பு ரீதியாக கட்டமைத்த பின்னர் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக உள்ளூர் பிரச்சனைகளை கையிலெடுத்து போராட்டங்களை நடத்தியது. இடதுசாரி அரசு அக்கறை செலுத்தாத பழங்குடிகள், பெண்கள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் என அனத்து தரப்பினரை ஒருங்கிணைத்து சிறு சிறு பேரணிகளை ஆங்காங்கே நடத்த வைத்தார் தியோதர்.
படுகொலையை அரசியலாக்கிய தியோதர்
பாஜகவின் விஸ்வரூபத்திற்கு மிகவும் முக்கியமானது சந்திர மோகன் திரிபுரா என்ற பழங்குடி இனத்தவரை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் படுகொலை செய்த சம்பவம்தான். தியோதருக்கு வலது கரமாக திகழ்ந்தவர் சந்திர மோகன் திரிபுரா. அதனால் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அவரை படுகொலை செய்தனர். ஆனால் இந்த படுகொலையை அரசியல் ஆதாயமாக்கினார் தியோதர். இப்படுகொலைக்கு நியாயம் கேட்டு 60 தொகுதிகளிலும் போராட்டங்களை நடத்தியது பாஜக. ஒரே நாளில் 42,000 பேரை இடதுசாரி அரசு கைது செய்தது. திரிபுராவின் வரலாற்றிலேயே மிகப் பெரிய போராட்டம் இதுதான். கிராமப்புறங்களில் இப்படி பாஜகவை கட்டமமத்த தியோதர் இன்னொரு வித்தியாசமான பிரசாரத்தையும் கையில் எடுத்தார்.
ரயில்களில் நூதன பிரசாரம்
திரிபுரா முழுவதும் 42,000 கீழ்நிலை அமைப்பாளர்களை உருவாக்கினார் தியோதர். அவர்கள் தினந்தோறும் பிரதமர் மோடியின் டி ஷர்ட்டுகளை அணிந்து கொண்டு ரயில்களில் பயணிப்பர். ரயில் பயணிகளிடம் மோடி அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிப்பர். அந்த பயணிகளின் செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு தொடர்ந்து இடதுசாரி அரசுக்கு எதிரான பிரசாரங்களை இடைவிடாது அனுப்பினர்.
பாஜகவாக உருமாறிய காங்கிரஸ்
சமூக வலைதளங்களைக் கையாள்வதற்கு என தனி ஒரு குழுவையும் உருவாக்கினார் தியோதர். ஒருகட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பெரும்பாலோனோர் அப்படியே பாஜகவாக உருமாறினர்.
அமைச்சர்கள் பயணம்
மாதத்துக்கு 15 நாட்கள் திரிபுராவிலேயே தங்கி பாஜகவை வலுப்படுத்தினார் தியோதர். தாம் திரிபுரா செல்லும் போதெல்லாம் மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்துக் கொண்டு செல்வார். திரிபுராவின் பழங்குடி கிராமங்களுக்கு மத்திய அமைச்சர்கள் வந்து செல்வது அவர்களுக்கு பாஜக மீதான நம்பிக்கையை உருவாக்கியது. இப்படி 4 ஆண்டுகளாக இடைவிடாது தியோதர் வியூகம் வகுத்து செயல்பட்டதால் 'அமைப்பு பலமே' இல்லாமல் இருந்த திரிபுராவில் இப்போது ஆட்சிக் கட்டிலில் பாஜக அமர முடிந்திருக்கிறது.