நோய் வராமல் இருக்க சூடு போடும் விநோதம்... ஒடிசாவில் 25 குழந்தைகளுக்கு சித்ரவதை!
குழந்தைகளுக்கு நோய் வராமல் இருப்பதற்காக ஒடிசாவில் பின்பற்றப்படும் விநோதமான வழக்கத்தில் 25 குழந்தைகளுக்கு சூடு போடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
டென்கனல்: ஒடிசாவின் டென்கனல் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும் விநோத வழக்கத்தில் 25 குழந்தைகளுக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்காக இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒடிசாவின் டென்கனல் மாவட்டம் மத்கர்கோலா பஞ்சாயத்தில் குழந்தைகள் எந்த நோயும் வராமல் இருக்க அவர்களுக்கு சூடு போடும் விநோத வழக்கம் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மஹர சங்கராந்திக்கு அடுத்த நாள் இந்த சூடு போடும் நிகழ்ச்சியானது நடைபெறும். இதற்காக பெருமளவிலான மக்கள் தோரியா சந்தா கிராமத்தில் உள்ள பூபன் பகுதிக்கு ஆண்டுதோறும் பலர் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இதே போன்று இந்த ஆண்டில் வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படும் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் வரை என மொத்தம் 25 குழந்தைகளுக்கு சூடு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று மத்கர்கோலா நாட்டாமை தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு இது போன்று சூடு போடும் நிகழ்வு நடப்பது தமக்கு தெரியாது என்றும், உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்டு சட்ட விரோதமாக குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்துவேன் என்று ஊர்நாட்டாமை கூறியுள்ளார்.
ஆனால் இது தங்களின் முன்னோர்கள் கடை பிடித்து வந்த வழக்கம் என்றும், அதையே தான் ஒவ்வொரு ஆண்டும் மஹர சங்கராந்திக்கு அடுத்த நாள் சூடு போடு வழக்கமாக தொடர்வதாகவும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.