2 ஆண்டுகளாக பார்த்து பார்த்து கட்டப்பட்ட மோடி கோவில் இடித்து தரைமட்டம்
ராஜ்கோட்: குஜராத்தில் கட்டப்பட்ட மோடி கோவில் திறப்பு விழாவுக்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில் இடித்து தள்ளப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டப்பட்டது. பாஜக ஆதரவாளர்களான ஓம் யுவா அமைப்பு இந்த கோவிலை கட்டி அதில் மோடியின் சிலையை வைத்தது. வரும் 15ம் தேதி திறப்பு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தனக்கு கோவில் கட்டப்பட்ட செய்தியை அறிந்த மோடி ட்விட்டரில் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்தார். இதையடுத்து வியாழக்கிழமை சிலையை துணியை போட்டு மூடிவிட்டு கோவிலையும் மூடி வைத்தனர்.
கோவில் இடிப்பு
கோவிலை கட்டிய ஓம் யுவா அமைப்பினரே அந்த கோவிலை வியாழக்கிழமை இடித்து தள்ளினர். மோடிக்கு விருப்பம் இல்லாததால் கோவிலை இடித்ததாக அமைப்பின் தலைவர் ரமேஷ் உன்தாத் தெரிவித்துள்ளார்.
கடவுள் மோடி
மோடி கவலை தெரிவித்த பிறகு அவரது சிலையை அகற்றினோம். தற்போது கோவிலையே இடித்துவிட்டோம். எங்கள் கடவுளின் மனதை காயப்படுத்தியதை நினைத்து வருந்துகிறோம் என்று உன்தாத் தெரிவித்துள்ளார்.
பாரத மாதா
முதலில் மோடியின் சிலையை அகற்றிவிட்டு பாரத மாதாவின் சிலையை வைக்க முடிவு செய்தனர். ஆனால் பின்னர் கோவிலையே இடித்துவிட்டனர்.
2 ஆண்டுகள்
பாரத மாதாவுக்கு கோவில் கட்ட கோத்தாரியா கிராம பஞ்சாயத்து ஓம் யுவா அமைப்புக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கியது. ஆனால் அந்த அமைப்போ அந்த இடத்தில் மோடிக்கு கோவில் கட்டியது. இந்த கோவிலை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.