போபர்ஸ் ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அக்டோபரில் மீண்டும் விசாரணை
இந்தியா முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய போபர்ஸ் ஊழல் வழக்கை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி: இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள், போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து மீண்டும் உச்சநீதிமன்றம், வரும் அக்டோபர் மாதத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல, ஹிந்துஜா சகோதரர்கள் விடுதலையை எதிர்க்கும் வழக்கையும் உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது என்கின்றன செய்திகள்.
நாட்டையே உலுக்கிய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையே, ஸ்தம்பித்துப் போனது. இதில், சர்வதேச ஆயுத தரகர்கள், தனியார் நிறுவனங்கள் பலருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் தொடர்பு உள்ளதாகக்கூறி, ஐரோப்பிய தொழிலதிபர்கள், ஹிந்துஜா சகோதரர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதனை கடந்த 2005ம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து, ஹிந்துஜா சகோதரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக.,வைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் இதுபற்றி, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதையேற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இதன்பேரில், விசாரணை நடத்தவும் முன்வந்துள்ளது. அக்டோபர் மாதம் இதுபற்றிய விசாரணை தொடங்க உள்ளதால், பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ கூட இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.