பெங்களூர் குடிநீர் தேவையை ஈடுகட்ட கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்
Recommended Video
டெல்லி: காவிரி வழக்கில் இனி மேல்முறையீடு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கான நீரில் அளவு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு 177.2 டிஎம்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு இதே அளவு தண்ணீர் அதிகம் கிடைக்கப்போகிறது.
இதில் பெங்களூருக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்க உள்ளது. காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புபடி, பெங்களூருக்கு 19 டிஎம்சி தண்ணீர் கிடைத்து வந்தது. இப்போது கூடுதல் நீரை சேர்த்தால் 23.75 டிஎம்சி தண்ணீர் பெங்களூருக்கு கிடைக்க உள்ளது.
பெங்களூர் நகரம் 'குளோபல் நகரம்' என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கே தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மக்களும் கணிசமாக வசிக்கிறார்கள் என்று கர்நாடகா தனது தரப்பு வாதத்தில் தெரிவித்திருந்தது. இதை கருத்தில் கொண்டு, பெங்களூருக்கு கூடுதல் தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் பெங்களூரின் குடிநீர் தேவை ஓரளவுக்கு கட்டுப்படும் என எதிர்பார்க்கிறது. ஆனால் பெங்களூருக்கு ஆண்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் தேவை என கர்நாடக அரசு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தண்ணீரே இல்லாத நகரமாக பெங்களூர் மாறும் என ஐக்கிய நாடுகள் சபை தொடர்புள்ள அமைப்பு ஒன்று பட்டியல் வெளியிட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.