ஜெயலலிதாவுக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைக்காவிட்டால் தீபாவளி 'உள்ளே' தான்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வெள்ளியன்று விசாரணை நடத்தி அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படுமா? அல்லது தீபாவளி விடுமுறைக்குப் பின்னர்தான் ஜாமீன் கிடைக்குமோ? என்ற பரிதவிப்பில் அதிமுகவினர் இருக்கின்றனர்.
பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் மற்றும் 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் மனு
இதனால் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன், தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பிலோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்சிடம் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். ஜாமீன் மனுவை அவசர மனுவாக கருதி இந்த வாரத்திலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை விசாரணை
இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வருகிற 17-ந்தேதிக்கு இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெறும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
எந்த பெஞ்ச் விசாரணை?
எனினும், எந்த நீதிபதியின் தலைமையிலான பெஞ்சின் கீழ் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என்பது வரும் நாளை மறுநாள் வியாழ்னறுதான் தெரியவரும்.
வெள்ளிக்கிழமையே உத்தரவு?
இதனிடையே ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீது வெள்ளியன்றே விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஜாமீன் மனு மீது பதிலளிக்க அரசுத் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகு விசாரணை நடத்தப்பட்டால் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
தீபாவளி விடுமுறை
அத்துடன் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு 18-ந் தேதி முதல் 26ந் தேதிவரை உச்ச நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறையாகும். இதனால் வெள்ளிக்கிழமை இந்த மனுக்கள் மீது முடிவு எட்டப்படவில்லை என்றால் தீபாவளிக்குப் பிறகுதான் அடுத்த கட்ட விசாரணை நடக்க வாய்ப்புள்ளது. அப்படி நிகழ்ந்தால் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைப்பது மேலும் தாமதமாகும் என்ற பரிதவிப்பில் உள்ளனர் அதிமுகவினர்.
நம்பிக்கை
இருப்பினும் வெள்ளிக்கிழமையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றே ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்றும் அதிமுக வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.