பலாத்கார புகாரில் சிக்கிய அமைச்சரை கைது செய்வதில் விலக்கு கிடையாது: சுப்ரீம்கோர்ட் அதிரடி
பலாத்கார புகாருக்குள்ளான அமைச்சருக்கு எதிரான கைது ஆணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லி: பெண் ஒருவரை பலாத்காரம் செய்த உத்தரப்பிரதேச அமைச்சருக்கு கைது ஆணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அமைச்சர் அணுகலாம் என்றும் உச்சநிதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி அமைச்சரவைய்ல அமைச்சராக இருப்பவர் காயத்ரி பிரஜாபதி. சமாஜ்வாடி கட்சியில் மூத்த தலைவராகவும் உள்ளார்.
இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அத்துடன் தனது இளையமகளை அமைச்சர் தாக்கியதாகவும் அவரையும் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அந்தப்பெண் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.
வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
இந்தப் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
விசாரணை நடத்த முடிவு
இதையடுத்து போலீசார் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீது வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் புகார் தொடர்பாக போலீசார் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
விமானநிலையங்கள் உஷார்
இதற்காக அவரை தொடர்பு கொண்ட போது அவர் கடந்த 27ஆம் தேதி முதல் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது அமைச்சர் பிரஜாபதி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.
இளம்பெண்ணுக்கு சிகிச்சை
உத்தரப்பிரதேச - நேபாள எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பெண் தற்போது டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விலக்கு அளிக்க மனு
இந்நிலையில் அமைச்சரை கைது செய்வது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஆணையில் விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விலக்கு அளிக்க முடியாது
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கைது ஆணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். மாநில காவல்துறைதான் அமைச்சரை கைது செய்வதா வேண்டாமா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்
மேலும் அமைச்சரை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். மேலும் அமைச்சர் ஜாமீன் பெற வேண்டுமானால் அவர் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவத்துள்ளது.
அரசியல் சாயம் பூசுவது துரதிர்ஷ்டவசமானது
குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆணையிடப்பட்டதற்கு அரசியல் சாயம் பூசுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் நீதிபதிக்ள் வேதனை தெரிவித்துள்ளர்.இதனிடையே தன்மீதான குற்றச்சாட்டுகள் போலியானது என அமைச்சர் பிரஜாபதி தெரிவித்துள்ளார்.
அந்தப்பெண்ணை பார்த்ததே இல்லை
தன் மீது பழிபோடும் பெண்ணை இதுவரை பார்த்ததுக்கூட இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சி சார்பில் அமேதி தொகுதியில் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி போட்டியிடுகிறார். அங்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.