கர்ணன் உத்தரவு பிறப்பித்தால் வெளியிடக்கூடாது.. மீடியாக்களுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: நீதிபதி கர்ணன் வழங்கும் எந்த உத்தரவு குறித்த செய்திகளையும் வெளியிட கூடாது என்று ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.

இந்த நிலையில் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் மனநல பரிசோதனை நடத்த வந்த டாக்டர்களை, திருப்பியனுப்பி விட்டார் கர்ணன்.
அவ்வப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து கடும் கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வந்தார். இதையெல்லாம் பார்க்கும் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
இதற்கெல்லாம் உச்சமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கு நீதிபதி கர்ணன் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார். கர்ணனின் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அத்தோடு, நீதிபதி கர்ணன் வழங்கும் எந்த உத்தரவு குறித்த செய்திகளையும் வெளியிட கூடாது என்று ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்மூலம், மக்களிடையே ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.












Click it and Unblock the Notifications