ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தடை ரத்து: இன்று முதல் தினமும் விசாரணை
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பெங்களூர் நீதிமன்ற விசாரணையில் அரசு வழக்கறி ஞர் பவானிசிங் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா வழக்கு விசாரணையை பெங்களூரு நீதிமன்றம் உடனே துவங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ரூ.20000 அபராதம்
அரசு வக்கீல் பவானி சிங்குக்கு ரூ.20,000 அபராதம் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராகாத பவானி சிங்குக்கு பெங்களூரு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது, மேலும் ஆஜராகாத நாளுக்கான ஊதியத் தொகை அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக அபராதம்
பெங்களூரு நீதிமன்றம் விதித்த ரூ.1.30 லட்சம் அபராதம் அதிகம் என பவானி சிங் மேல் முறையீடு செய்தார். பவானி சிங் முறையீட்டை ஏற்று அபராத தொகையை ரூ.20.000 ஆக குறைத்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
ரூ. 66 கோடி சொத்து
கடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பல ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. சாட்சிகளிடம் விசாரணை முடிந்து இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.
பவானிசிங்கிற்கு அபராதம்
18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கில் தற்போது இறுதிக்கட்ட வாதம் தொடங்கியுள்ள நிலையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, விசாரணையின் போது ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.60,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் மனு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பவானிசிங் மனு தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சவுகான் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பவானிசிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
மூன்று வார தடை
இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை தொடருவதற்கு 3 வார இடைக்கால தடை உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். மூன்று வார காலத்திற்கு பிறகு தொடர்ந்து வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார். அதன்படி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று முதல் விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது.