சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயில்களில் கட்டணம் இன்று முதல் உயர்வு - பயணிகளுக்கு கூடுதல் சுமை
டெல்லி: அதிவேக ரயில்களான சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ஆகிய ரயில்களில் புதிய கட்டண முறையை ரயில்வே இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.
இதன்படி மேற்கண்ட ரயில்களில் உள்ள டிக்கெட் எண்ணிக்கையில் முதல் 10 சதவீதம் அடிப்படை கட்டணத்தில் இருக்கும். 3 மாதங்களுக்கு இந்த கட்டண உயர்வு சோதனை முறையில் அமல்படுத்தப்படுவதாகவும், மக்களின் வரவேற்பையும் எதிர்ப்பையும் பொறுத்து கட்டண உயர்வு நீட்டிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில்களின் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தியுள்ளது. ராஜதானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட அதிவேக ரயில்களின் கட்டணம் 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை டிக்கெட்டுகளின் விற்பனைக்கேற்ப உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு 10 சதவிகித டிக்கெட்டிற்கும் 10 சதவிகித அளவுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. உதாரணமாக, முதல் 10 சதவிகித டிக்கெட்டிற்கு 100 ரூபாய் கட்டணம் என்றால், அடுத்த 10 சதவிகித டிக்கெட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இதில் கடைசி 50 சதவிகித டிக்கெட்டுக்கு கட்டணம் ஒன்றரை மடங்காக உயரும். இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நடுத்தர வர்க்க மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் இந்தப் புதிய கட்டண முறை, முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், எக்சிகியூட்டிவ் பெட்டிகளுக்கு பொருந்தாது என்பதுடன், தட்கல் கட்டணத்திலும் மாற்றமில்லை. இத்திட்டத்தின் மூலம், 500 கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டாலும், மக்களுக்கு என்னவோ அதிக செலவு என்கின்றனர் ரயில்பயணிகள்.
மேலும், விமான கட்டணத்துக்கு நிகரான இந்த கட்டண முறையை மத்திய ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தும் பட்சத்தில் நடுத்தட்டு பிரிவினர் மிகவும் அவதிக்குள்ளாவார்கள் என்பதே பொதுமக்களின் கவலையாக உள்ளது. பண்டிகை காலங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களுக்கு மிகப்பெரிய இடையூறாக அமையும் என்று ரயில்வே பயணியர் சங்க இணை செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட கட்டண முறையில் இந்த உயர்வு தவிர வழக்கமான முன்பதிவு கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம், கேட்டரிங், சேவை வரி உள்ளிட்டவையும் வசூலிக்கப்படும். வழக்கமான முறையில் தட்கல் டிக்கெட் எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
பிரிமியம் தட்கல் பிரிவு இதில் இல்லை. சலுகை கட்டணம், ரத்து விதிகளில் மாற்றம் எதுவும் இல்லை. ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு முடிந்து, ரயில் புறப்படும் நாளில் கரண்ட் டிக்கெட் முன்பதிவு செய்வோர், கடைசியாக விற்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தில் டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். ரயில்வேயின் இந்த புது முடிவால் பண்டிகை, விழாக்காலங்களில் முன்பதிவு செய்யும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.