மமதாவுக்கு நெருக்கடி.. .ராஜினாமா செய்த அமைச்சர் சுவேந்து அதிகாரிக்கு பாஜக வலை- பரபரக்கும் மே.வங்கம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி, தனது ஆதரவாளர்களை திரட்டி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். இந்த திடீரென அமைச்சர் சுவேந்து அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சி தலைவர்கள் தூது அனுப்பி வருகின்றனர். சுவேந்து அதிகாரி கட்சியை விட்டு எங்கேயும் செல்ல மாட்டார் என்றும், அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மாநில எம்.பி. சவுகாதா கூறினார். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிரடி ராஜினாமா
மேற்கு வங்க மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவில் இணைகிறாரா
கடந்த சில மாதங்களாகவே கட்சி தொடர்பான கூட்டங்களை தவிர்த்து வந்த அவர் பல்வேறு இடங்களில் கட்சியின் சின்னம், கொடி அல்லது பேனர் இல்லாமல் பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். சுவேந்து அதிகாரி விரைவில் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை மும்முரம்
எனவே கட்சியிலும், மக்களிடத்திலும் செல்வாக்கு உள்ள அவரை, தக்க வைக்ககட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக தலைவர்களும் அவரை தங்கள் வசம் இணைக்க தூது அனுப்பி வருகின்றனர். ஒரு பக்கம் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுவேந்து அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அவர் தனது ஆதரவாளர்களுடன் தொடர்பில் உள்ளார்.

ஆதரவாளர்களுடன் தொடர்பு
மேற்கு வங்கத்தில் 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுவேந்து அதிகாரியின் ஆதரவாளர்கள் உள்ளதாகவும், அவர்களை ஒன்று திரட்டி சுவேந்து அதிகாரி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சுவேந்து அதிகாரியின் சிக்னலுக்காக காத்திருபப்தாகவும், எங்களது ஆதரவாளர்கள் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள தயாராக இருபப்தாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

கதவுகள் திறந்து உள்ளன
இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சவுகாதா ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுவேந்து அதிகாரி கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டார். அவரிடம் சமாதானம் பேச கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. கட்சி தலைமைக்கும், அவருக்கும் உள்ள பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கும் என நான் நம்புகிறேன் என்றார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications