நான் அனுப்புற தபால் ஐயப்பன் படிப்பாரு.. ஆண்டுக்கு ஒருமுறை செயல்படும் 'சபரிமலை' தபால் நிலையம்!
பம்பை: இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒரு முறை செயல்படக் கூடிய தபால் நிலையம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் முத்திரையுடன் வரும் கடிதங்கள் புனிதமானதாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.
60 ஆண்டுகளுக்கு முன்னர் 1963-ம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் தபால் நிலையம் ஒன்று திறக்கப்பட்டது. மாளிகைப்புரம் கோவில் அருகே இந்த தபால் நிலையம் இப்போதும் செயல்பட்டு வருகிறது.. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட காலம் மட்டும்தான் இந்த தபால் நிலையம் இயங்கும்.

சபரிமலை சீசன் என சொல்லப்படுகிற மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் தபால் நிலையம் செயல்படும். இந்தியாவில் தபால் துறை பொதுவான தபால் முத்திரைகளைப் பயன்படுத்துகிறது. அதேநேரத்தில் பல்வேறு சிறப்பு காரணங்களால் 39 இடங்களில் தனி முத்திரைகளுக்கும் அனுமதி உண்டு. அத்தகைய தனி தபால் முத்திரை சிறப்பு பெற்ற தபால் நிலையங்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் தபால் நிலையமும் ஒன்று.

சரி சபரிமலை தபால் நிலையத்துக்கு வந்து சேரும் கடிதங்கள் யாருக்கு எழுதப்படுகிறவை என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? சாட்சாத் சாஸ்தாவுக்குதான்.. ஆம் சபரிமலை ஐயப்பன் சுவாமிக்குதான் இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். சபரிமலை ஐயப்பனை நேரில் வந்து தரிசனம் செய்ய இயலாதவர்கள் தபால் மூலமாக தங்களது வேண்டுதல்களை, திருமண அழைப்பிதழ்களை, குறைகளை எழுதி அனுப்புவர். காணிக்கைகளை மணியார்டர் மூலம் அனுப்புவர். இந்த தபால்கள், மணியார்டர் பணம் ஆகியவை ஐயப்பன் சன்னதியில் முன்வைத்து வழிபாடு செய்த பின்னர் தபால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். சபரிமலைக்கான தனி பின் கோடு 689713. நாட்டின் ஜனாதிபதியை தொடர்ந்து தனி பின்கோடு கொண்டவர் சபரிமலை ஐயப்பன் தான்.

மேலும் சபரிமலை பிரசாதங்கள் இந்த தபால் நிலையம் மூலமாக அனுப்பி வைக்கப்படும். தனித்துவமிக்க சபரிமலை தபால் நிலைய முத்திரை தங்கள் வீடு தேடி வருவதை ஐயப்ப பக்தர்கள் புனிதமானதாக போற்றுகிற நம்பிக்கை இருக்கிறது. ஐயப்பன் முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள், இன்லேண்ட் லெட்டர்கள் ஆகியவற்றையும் பக்தர்கள் சபரிமலை யாத்திரையின் நினைவாக வாங்கி செல்வதும் வழக்கம். மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் சபரிமலை தபால் நிலையம் மூடப்பட்டு பம்பை தபால் நிலைய லாக்கரில் முத்திரை உள்ளிட்டவை பாதுகாக்கப்படும்.













Click it and Unblock the Notifications