இந்தியாவை காப்பாற்ற.. மோடி வடிவில் பிறந்துள்ளார் விவேகானந்தர்.. என்ன பாஜக எம்பி இப்படி சொல்லுறாரு?
கொல்கத்தா: "இந்தியாவையும், இந்திய மக்களையும் துஷ்டர்களிடம் இருந்து காப்பாற்ற சுவாமி விவேகானந்தர் நரேந்திர மோடி வடிவில் மறுபிறவி எடுத்திருக்கிறார்" என மேற்கு வங்க பாஜக எம்.பி. சவுமித்ரா கான் கூறியிருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
முற்றும் துறந்த முனிவராக வாழ்ந்த சுவாமி விவேகானந்தரை மோடியுடன் ஒப்பிட்டு அவரை பாஜக தொடர்ந்து களங்கப்படுத்தி வருவதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாஜக தலைவர்கள் பலர் பதவியில் நீடிப்பதற்காகவும், புதிய பதவியை வாங்குவதற்காகவும் மோடி புகழ் பாடுவது அதிகரித்துள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சிகள், அவர்களின் புகழுரையை மோடி உண்மை என நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
தனியாக இறங்குவோம்.. ஈரோடு கிழக்கில் பாஜக போடும் சரவெடி.. நிஜமா? இப்படி மட்டும் நடந்தா எல்லாம் ஓவர்!
கடவுளுடன் ஒப்பிடப்படும் தலைவர்கள்
நாட்டில் சமீபகாலமாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரை பல்வேறு கடவுள்களுடனும், பெரும் புனிதர்களுடனும் ஒப்பிட்டு பேசுவது அதிகரித்துள்ளது. இதை அந்த தலைவர்களும் பெரிதாக கண்டுகொள்ளாததால் நாள்தோறும் இதுபோன்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன. உதாரணமாக, பிரதமர் மோடியை ராமருடனும், கிருஷ்ணருடனும் ஒப்பிட்டு குஜராத் தேர்தலில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், ராகுல் காந்தியையும் ராமருடன் காங்கிரஸார் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இதுபோன்ற பேச்சுகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக எம்பி ஒருவர் மீண்டும் இதே தொனியிலான பேச்சை முன்வைத்துள்ளார்.
விவேகானந்தரின் மறுபிறவி..
துறவி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா மேற்கு வங்க பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது இந்த விழாவில் பாஜக எம்பி சவுமித்ரா கான் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "சுவாமி விவேகானந்தர் இல்லை என்றால் இன்று இந்தியா இந்த நிலையில் இருந்திருக்காது. உலகுக்கே முதன்முதலில் இந்தியாவை பற்றியும், இந்தியர்களின் நாகரீகம் பற்றியும் எடுத்து சொன்னவர் விவேகானந்தர். அன்று இந்தியாவின் பெருமையை விவேகானந்தர் உலகறியச் செய்தார் என்றால், இன்று இந்தியாவின் வலிமையை பிரதமர் மோடி உலகறியச் செய்து வருகிறார்.
இந்தியாவை காப்பாற்ற..
சுவாமி விவேகானந்தர் இறந்துவிட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களுக்குதான் மரணம் உண்டு. மகான்களுக்கு மரணம் இல்லை. இந்தியாவையும், இந்திய மக்களையும் துஷ்டர்களிடம் இருந்து காப்பாற்ற நரேந்திர மோடி வடிவில் மறுபிறவி எடுத்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர். விவேகாநந்தர் எவ்வாறு நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தாரோ அதுபோலவே மோடியும் செய்து வருகிறார். தனது தாயார் மரணித்த தருவாயிலும் நாட்டுக்காக உழைத்த மோடியை இந்த நாடே பார்த்து வியவந்தது. நவீன இந்தியாவின் விவேகானந்தராக மோடி திகழ்ந்து வருகிறார்" என சவுமித்ரா கூறினார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்நிலையில், சவுமித்ரா கானின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும், விமர்சனத்தையும் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து மேற்கு வங்க அமைச்சரும், கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், "நரேந்திர மோடியுடன் ஒப்பிடப்பட்டதை விட விவேகானந்தக்கு பெரிய அவமானம் ஏதும் இருக்க முடியாது. முற்றும் துறந்த துறவியாக வாழ்ந்து வந்த விவேகானந்தரை பல லட்ச ரூபாயில் உடை அணியும் மோடியுடன் எவ்வாறு ஒப்பிட முடியும்? அதுமட்டுமல்லாமல் மோடியின் கொள்கை, விவேகானந்தரின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. பாஜக தலைவர்கள் பலர் பதவியில் நீடிப்பதற்காகவும், புதிய பதவியை வாங்குவதற்காகவும் மோடி புகழ் பாடுவது அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். இவற்றை எல்லாம் மோடி உண்மை என நினைத்துக் கொள்ள வேண்டாம்" என ஃபிர்ஹாத் ஹக்கீம் கூறினார்.