ராஜினாமா கடிதத்தை ரெடியாக வையுங்க "ஜெஜெ" .. சு.சுவாமி கிண்டல்
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
NDTV website of Srinivasan Jain has now practically shredded the KHC judgment. JJ: Keep your resignation letter ready!!
— Subramanian Swamy (@Swamy39) May 23, 2015
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கிறது. அதே நேரத்தில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது.
இதேபோல் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் முடிவுக்காக வருகிற ஜூன் 1-ந்தேதி வரை காத்திருக்கப்போவதாகவும், அதன்பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து தான் முடிவு செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே தமது ட்விட்டர் பக்கத்தில், "என்.டி.டி.வி. இணையதளத்தில் சீனிவாசன் ஜெயின் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கிழிகிழி என கிழித்துவிட்டார்.. ஜெஜெ (ஜெயலலிதா) உங்க ராஜினாமா கடிதத்தை தயாராக வையுங்க" என்றும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.