”அதிவேக விபத்துக்களில் தமிழ்நாடு இரண்டாம் இடம்”
டெல்லி: வேகத்தை மீறுவதால் அதிகரிக்கும் விபத்துகளில் தமிழகம் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் ஒரு நாளைக்கு 166 பேர் உயிரிழப்பதாக தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பிரிவான சாலை ஆய்வுத்துறை மேற்கொண்டது.
அதிக வேகம் ஆபத்து:
இதன்படி வேகத்தை மீறுவதால் ஏற்படும் விபத்துகளில் மட்டும் கடந்த ஆண்டில் 68000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு:
இதில் மகாராஷ்டிரா மாநிலம் 8600 உயிரிழப்புகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.
வேகக் கட்டுப்பாடு நிர்ணயம்:
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் புறநகர சாலைகளில் வேகக்கட்டுபாடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் போதுமான கண்காணிப்பு இல்லாததால் பல வாகனங்கள் வேகத்தை மீறுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் அதிகபட்ச வேக அளவை கூட சாலைகளில் அறிவி்க்கவில்லை.
கண்காணிப்பு கேமராக்கள்:
இந்நிலையில் சாலை விதிகளை மீறுவோரை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டன. எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் திருத்தத்திற்கு இன்னும் நாடாளுமன்றம் ஒப்புதலளிக்கவில்லை.
அபராதம் விதித்தும் திருந்தவில்லை:
அந்த திருத்தத்தில் வேகத்தை மீறுவோர் மீது முதலில் ரூ.1000மும் மீண்டும் மீறினால் ரூ.5000ம் அபராதமாக வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.