காங். செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்விக்கு வருமான வரித்துறை ரூ.57 கோடி அபராதம்!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மனு சிங்விக்கு வருமான வரித்துறை ரூ57 கோடி அபராதம் விதித்துள்ளது.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றும் அபிஷேக்சிங்வி, தனது சேம்பரில் ஜூனியர் பெண் வழக்கறிஞருடன் உடலுறவு கொண்ட காட்சிகள் அடங்கிய சிடி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து வருமான வரித் துறையை ஏமாற்றும் வகையிலான கட்டுக் கதைகளையும் கட்டவிழ்த்துவிட்டிருந்தார் சிங்வி. பல கோடி ரூபாய் வரவு செலவு தொடர்பான வவுச்சர்கள் அனைத்தையுமே கரையான் அரித்துவிட்டதாக கூறியதுடன் லேப் டாப்களையே பல கோடி ரூபாய்க்கு வாங்கினேன் என்றும் கூறியிருந்தார்.[கரையான் பாதிப்பில் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க சில வழிகள்!!!]
வருமான வரித்துறையிடம் சிக்கிய சிங்வி
இப்படி மூன்று ஆண்டுகள் அவர் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கில் ஏராளமான குளறுபடிகள் இருந்தன. இது தொடர்பாக வருமான வரித்துறை சிங்வியிடம் விளக்கம் கேட்டது.
ரூ.57 கோடி அபராதம்
உடனே வருமான வரி தகராறுகள் தீர்வு ஆணையத்துக்கு போனார் அபிஷேக்சிங்வி. அங்கு அவர் தாக்கல் செய்த மனுவில், தானும், தன் நிறுவனமும் மேற்கொண்ட செலவுகள் தொடர்பான வவுச்சர்களையும், சில ஆவணங்களையும் தாக்கல் செய்ய முடியவில்லை; தன் ஆடிட்டரின் அலுவலகத்தில் இருந்த அந்த ஆவணங்களை, 2012 டிசம்பரில், கரையான்கள் தின்று விட்டன என்றும் கூறியிருந்தார்.
சிங்வி கூறியதை, ஏற்கனவே வருமான வரித்துறையினர் ஏற்க மறுத்திருந்த நிலையில் அவர் மேல் முறையீடு செய்த தகராறுகள் தீர்வு ஆணையமும் நிராகரித்தது. அத்துடன் அவருக்கு செப்டம்பர் மாதத்தில் ரூ. 56.67 கோடி அபராதம் விதித்தது.
ராஜஸ்தான் கோர்ட்டில் முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து ஜோத்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சிங்வி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், வழக்கறிஞர்களில் அதிக வருமான வரி செலுத்துபவன் நான். என்னுடைய வருமானம் மற்றும் செலவுகள் எல்லாம், காசோலைகள் மூலமே மேற்கொள்ளப்பட்டன.
சில வகையில் அதிக செலவு ஏற்பட்டுள்ளது என்பதை வருமான வரித்துறை ஏற்க மறுக்கிறது. அந்த செலவுகள் தொடர்பான சில ஆவணங்கள் அழிந்து விட்டன. அதுபற்றி போலீசிலும் புகார் செய்துள்ளேன். எனவே ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கும், அபராதத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆணையத்துக்கு தடை
இந்த மனுவை விசாரித்த, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், வருமான வரி தகராறுகள் தீர்வு ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.
1250 லேப் டாப்
சிங்வியின் வருமான வரிக் கணக்கை ஆராய்ந்த தீர்ப்பாயம் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தது. சிங்வியிடம், அவருக்கு உதவி செய்ய 14 வழக்கறிஞர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்காக, தலா 40 ஆயிரம் ரூபாய் விலையில், 1,250 லேப் - டாப்கள் வாங்கியதாக கூறுவது ஏற்புடையதல்ல.
சோலார் பேனலில் பொய் கணக்கு
சிங்வியின் ரிஷாப் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு 36 கோடி ரூபாய் செலவில் சூரிய சக்தி பேனல்கள் வாங்கியதாக வருமான வரி கணக்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சூரிய சக்தி பேனல்கள், 21 கோடி ரூபாய்க்கு தான் வாங்கப்பட்டு உள்ளன. அதை சம்பந்தப்பட்ட நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது.
ரூ11 கோடி யாருக்கு?
மூன்று ஆண்டுகளில், 11 கோடிரூபாய் அளவுக்கு, காசோலைகள் மூலம் பலருக்கும், சிங்வி பணம் செலுத்தி உள்ளார். அந்தப் பணம் யாருக்கு சென்றது, அவர்களுக்கு எதற்காக பணம் கொடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்பது உள்ளிட்ட கேள்விகளை வருமான வரித்துறை தீர்ப்பாயம் எழுப்பியுள்ளது,
சட்டத்தின் அத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்தியே சிங்வி வருமான வரித்துறையை ஏமாற்ற முயலுகிறார் என்பதே வருமான வரித்துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.