தெலுங்கானாவில் 22 பேரை வாளால் வெட்டிய சாஃப்ட்வேர் எஞ்சினியர்- சுட்டுக் கொன்ற போலீஸ்
தெலுங்கானா: கரீம்நகர் பகுதியில் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, கூர்மையான வாளால் 22 பேரை கண்மூடித்தனமாக தாக்கியதால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
இதுகுறித்து கரீம்நகர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ராமா ராவ் கூறுகையில், லஷ்மி நகரைச் சேர்ந்தவர் பல்விந்தர் சிங், இவர் பெங்களூருவில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை 7 மணியளவில் தனது பெற்றோருடன் ஏற்பட்ட சண்டையில், வீட்டில் இருந்த வாளை எடுத்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் படுகாயமண்டைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர்.

அப்போது கட்டுக்கடங்காத கோவத்துடன், வீட்டை விட்டு வெளியே வந்த பல்வீந்தர் சிங், எதிரே நடந்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை சராமாரியாக தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வாளால் தாக்கியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரிடம் சமாதானமாக பேசி அவர் கையில் இருந்த வாளை வாங்க முயற்சித்துள்ளனர். ஆனால் பல்வீந்தர் அவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
அதனையடுத்து, போலீசார் பல்விந்தர் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய இளைஞரின் பெற்றோரும், ஆட்டோ ஓட்டுநரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த காவலர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாளால் தாக்கப்பட்ட மேலும் பலரும் படுகாயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications