ஸ்மார்ட்போன் வாங்க ரத்ததானம் செய்த 14 வயது சிறுவன்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை தானமாக கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுக் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன் சஞ்சய்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறுந்துவிட்டார். அவரது தாய் ஒரு கிளினிக்கில் வேலை செய்து மாதம் ரூ.3 ஆயிரம் சம்பாதிக்கிறார். சஞ்சய் துணிக்கடையில் ரூ.2 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்கிறார்.

சஞ்சய் மற்றும் அவரின் தாயின் வருமானத்தை வைத்து 5 பேர் கொண்ட குடும்பத்தை நடத்த சிரமமாக உள்ளது. இந்நிலையில் சஞ்சய் ஸ்மார்ட்போன் வாங்க பணம் சேமித்து வந்துள்ளார். இந்த சூழலில் ஒருவர் சஞ்சயை அணுகி ரத்ததானம் செய்தால் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சஞ்சய் ஒரு யூனிட் ரத்தத்தை ரூ.500க்கு விற்பனை செய்துள்ளார். சஞ்சயை தவிர வேறு இரண்டு சிறுவர்களும் பணத்திற்காக ரத்ததானம் செய்துள்ளனர். 18 வயதிற்குட்பட்டவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவர்களிடம் ரத்தத்தை பெற்ற ரத்த வங்கிக்கு சீல் வைத்து 3 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications