மனைவி கர்ப்பமானதால் ஆத்திரம்! துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவர்!
நகரி: தெலுங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், காமா ரெட்டி கூடா பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி(25). இவர் மகேந்தர் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான புதிதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். இந்த நிலையில் சுவாதி கர்ப்பம் ஆனார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே திடீரென குடும்பத் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்தர் ரெட்டி, சுவாதியை வெட்டிக் கொலை செய்தார். பிறகு அவரது உடலை அப்புறப்படுத்த அதை துண்டு துண்டாக வெட்டினார். அவற்றை ஒரு பாலித்தீன் கவரில் சுற்றி புறநகர் பகுதியில் இருந்த ஆற்றில் வீசினார்.
இதனிடையே உடலை வெட்டும் சப்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டு, அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு மகேந்தர் ரெட்டி உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டதை பார்த்தனர். இதையடுத்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
ஆற்றில் உடல் பாகங்களை வீசிவிட்டு வந்த மகேந்தர் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் வீசிய உடல் பாகங்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மகேந்தர் ரெட்டியிடம் விசாரணை நடத்தியதில் மகேந்தர் ரெட்டியும் சுவாதியும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். எனவே சுவாதி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மகேந்திர ரெட்டி விரும்பவில்லையாம்.
இந்த காரணத்தால் ஏற்கெனவே அவர் ஒரு முறை அந்த பெண்ணின் கருவை கலைத்துள்ளாராம். ஆனாலும் அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் ஆத்திரமடைந்த மகேந்தர் ரெட்டி, சுவாதியை வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மனைவியை காணவில்லை என்றும் தனது மைத்துனியிடம் (சுவாதியின் தங்கை) மகேந்தர் ரெட்டி தெரிவித்திருந்தாராம். கொலையை மறைக்க இப்படி நாடகமாடியதாக தெரிகிறது.
ஆனால் போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மகேந்தர் ரெட்டி உண்மையை தெரிவித்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications