திடீரென 'கட்' ஆகும் போன் அழைப்புகள்- ஒரு காலுக்கு ரூ.1 இழப்பீடு தர நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு!
மும்பை: மொபைல் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்புகள் திடீரென கட் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழைப்புக்கு 1 ரூபாய் இழப்பீடு வழங்க செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை டிராய் இன்று வெளியிட்டுள்ளது. அதில், மொபைல் போனில் அழைப்புகள் திடீரென பாதியில் கட் ஆனால் வாடிக்கையாளருக்கு ஒரு அழைப்புக்கு ரூ1 இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த அழைப்பு கட் ஆனது மற்றும் இழப்பீடு குறித்த எஸ்.எம்.எஸ்.ஐ வாடிக்கையாளருக்கு 4 மணிநேரத்துக்குள் செல்போன் நிறுவனங்கள் அனுப்பி வைக்க வேண்டும். போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த இழப்பீடு கணக்கில் வரவு வைக்க வேண்டும். இது 2016ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
மேலும் மொபைல் போன் சேவை குறைபாடுகளுக்கு விதிக்கப்படும் ஒவ்வொரு கட்ட அபராத தொகையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ரூ1 லட்சத்தில் இருந்து ரூ2 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications