பயங்கரவாதிகளுக்கு நிதி -காஷ்மீரில் 14 மாவட்டங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி ரெய்டு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 14 மாவட்டங்களில் 50 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய பா.ஜ.க.அரசால் ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினர்.

மாநில அந்தஸ்து
இந்த ஆலோசனையின் போது ஜம்மு காஷ்மீரில் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதல் கட்டமாக தொகுதிகள் மறுசீரமைப்பு பணியை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து முதலில் வழங்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

டிரோன்கள் தாக்குதல்கள்
ஜம்மு காஷ்மீரில் பொதுவாக தீவிரவாதிகள் தாக்குதல்கள், கல்லெறி சம்பவங்கள் கடந்த ஓராண்டில் குறைந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் டிரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் விமானப் படை தளம் மீது டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த டிரோன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களும் இந்த டிரோன்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

டார்கெட் ஜமாத்-இ-இஸ்லாமி
அத்துடன் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பு காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்களது இயக்கத்தில் சேர்த்து வருவதும் தெரியவந்துள்ளது. இது தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இந்த அமைப்புக்கு துபாய், துருக்கி வழியாக பாகிஸ்தான் உதவியுடன் நிதி உதவி கிடைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயரால் இந்த பணம் தீவிரவாதிகள் கைகளுக்கு போவதும் தெரியவந்தது. இந்த நெட்வொர்க்கை கூண்டோடு அழிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் இன்று 14 மாவட்டங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
Recommended Video

50 இடங்களில் ரெய்டு
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், பட்காம், கண்டெர்பால், பாரமுல்லா, குப்வாரா, பந்திப்போர், அனந்தநாக், ஷோபியான், புல்வாமாக், குல்காம், ராம்பான், தோடா, கிஷ்த்வார், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் 50 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனைகளை நடத்தினர். சந்தேகத்துக்குரிய அறக்கட்டளைகளிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக பேசிய என்.ஐ.ஏ. அதிகாரிகள், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் அரசியல் நடவடிக்கைகள் தொடங்குவதைத் தடுக்க ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருக்கிறது. ராணுவத்தினர் மீது கல்லெறிதல் தாக்குதல்களை தீவிரமாக்கவும் அந்த அமைப்பு திட்டமிட்டிருக்கிறது. இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனர். ஏற்கனவே ஜூலை 31-ந் தேதியன்று ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது லஷ்கர்-இ-முஸ்தாபா என்ற பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் ஹிதயதுல்லா மாலிக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications