நக்சலைட்டு இல்லாத முதல் கிராமம்.. சத்தீஸ்கரில் நடந்த மாற்றம்..ரூ.1 கோடிக்கு கிடைக்கும் பெரிய கிப்ட்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தாரில் உள்ள படேசட்டி கிராமத்தை சேர்ந்த 11 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். இதன்மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் இல்லாத முதல் கிராமம் என்ற பெருமையை படேசட்டி பெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2013ம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவின் விஷ்ணுதியோ சாய் முதல்வராக உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தை எடுத்து கொண்டால் நக்சலைட்டுகள் நடமாட்டம் என்பது அதிகம் உள்ளது. நக்சலைட்டுகளை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதன்படி நக்சலைட்டுகள் மனம் திருந்தினால் அவர்களுக்கு ஊக்கத்தொகை என்பது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் மனம் திருந்தி வாழ தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் இல்வாத் பஞ்சாயத்து யோஜனா என்ற திட்டம் அங்கு நக்சலைட்டுகளுக்காக தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் என்பது நக்சலைட்டுகள் இல்லாத கிராமத்தை உருவாக்குவதாகும்.
இந்த திட்டத்தின்படி மனம் திருந்தி வருவோருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் நக்சலைட்டுகளை மனம் திருந்தி சரணடைய வைக்கும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் செய்து கொடுக்கப்படும். அதன்படி சுக்மா என்ற இடத்தின் அருகே படாசட்டி எனும் கிராமத்தை சேர்ந்த 11 நக்சலைட்டுகள் கிராம பஞ்சாயத்து முன் சரணடைந்தனர்.
இதன்மூலம் அந்த படேசட்டி கிராமம் நக்சலைட்டுகள் இல்லாத கிராமமாக மாறி உள்ளது. இதுபற்றி பஸ்தார் ஐஜி சுந்தரராஜ் கூறுகையில், ‛‛கடந்த சில நாட்களாக லோக்கல் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். நக்சலைட்டுகளை சரணடைய தேவையான உதவிகளை செய்தோம். தற்போது வெற்றி பெற்றுள்ளோம். சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது'' என்றார்.
இதுபற்றி படேசட்டி கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினர் கல்மு ஜோகா கூறுகையில், ‛‛போலீஸ் உதவியுடன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் மக்கள் அனைவரும் சேர்ந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தோம். தற்போது 11 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். இப்போது எங்கள் கிராமத்தில் நக்சலைட்டுகள் யாரும் இல்லை. நக்சல் ப்ரீ கிராமமாக மாறி உள்ளது. எங்கள் கிராமத்தில் பஞ்சாயத்து கட்டம், மருத்துவமனை இல்லை. பள்ளிக்கூடம் 8ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. தற்போது கிடைக்கும் பணத்தை வைத்து சாலை, தண்ணீர் வசதி உள்பட உள்கட்டமைப்பு வசதிகளை செய்வோம்.'' என்றார்.












Click it and Unblock the Notifications