பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து.. நகைச்சுவையாக கூறினேன்.! மன்னிப்பு கோரிய தலாய் லாமா
தர்மசாலா: சமீபத்தில் தனியார் ஊடகம் நடத்திய நேர்காணலின் போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக, தலாய் லாமா மிகுந்த வருத்தம் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
அதே சமயம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க தார்மீகக் கொள்கை இல்லாதவர் மற்றும் சிக்கலான உணர்ச்சிகள் கொண்டவர் என தெரிவித்த கருத்துக்கு திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா மன்னிப்பு கேட்கவில்லை.
திபெத்தில் புத்த மத தலைவராக இருப்பவர் தலாய்லாமா என்று அழைக்கப்படுகிறார். தற்போது தலாய்லாமாவாக இருப்பவர் 14-வது புத்த மத தலைவராவார். இவர் விரைவில் தனது 84வது வயதை எட்ட உள்ளார். சீனாவின் அடக்குமுறையால் தற்போதைய தலாய் லாமா திபெத்திலிருந்து இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தவர் ஆவார்.
சுமார் பத்தாயிரம் திபெத்தியர்களோடு 60 ஆண்டுகளாக தர்மசாலாவில் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார் தற்போதைய தலாய் லாமா. தற்போதைய தலாய் லாமா உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வருவதால், புத்த மதத்தினர் அடுத்த தலாய்லாமாவை தேர்வு செய்யும் முடிவில் உள்ளனர்.
அடுத்ததாக தேர்வு செய்யப்படும் தலாய்லாமா ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என புத்த மதத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்று தலாய் லாமாவை பேட்டி கண்டது. அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பேட்டியின் போது சீனா குறித்து பேசிய தலாய் லாமா, சீன அரசியல் தலைவர்களின் அரசியல் சிந்தனை மிகவும் குறுகியது, அவர்கள் அறியாமையை நினைத்து கவலைப்படுவதாக கூறினார்.
தன்னை சந்திப்பதற்கு சீன அதிபர் இன்னும் முயற்சிக்கவில்லை என்ற தலாய் லாமா, ஓய்வுபெற்ற சில சீன அதிகாரிகளோடு கலந்துரையாடியதாக கூறினார் ஆனால் அவையெல்லாம் இத்தனை ஆண்டு காலம் சீன அதிபராக உள்ள எவரையும் சந்திக்க உதவவில்லை என குறிப்பிட்டார்.
பின்னர் அகதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த தலாய் லாமா ஐரோப்பிய நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு கல்வி மற்றும் உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும். பின்னர் அவரவர் நாடுகளுக்கு அகதிகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
அதே போல அடுத்த தலாய் லாமாவாக பெண் ஒருவரை தேர்வு செய்யப் போலதாக வெளியான தகவல் குறித்து பதிலளித்தார் அப்போது ஒரு பெண்ணை தலாய்லாமாவாக தேர்வு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தலாய் லாமாவாக ஒரு பெண் தேர்வு செய்யப்படுவதாக இருந்தால் அவர் அழகானவராக இருக்க வேண்டும். ஒரு தலாய்லாமா பெண் அழகனாவராக இருந்தால் மட்டுமே அவரை பெரும்பாலானோர் பார்ப்பதற்கு விரும்புவார்கள். அழகில்லாத பெண்ணை பார்க்க பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள் என கூறினார்.
ஒரு மத தலைவராக இருந்து கொண்டு பெண்கள் குறித்து இவ்வாறு கருத்து தெரிவிக்கலாமா என தலாய் லாமாவிற்கு, சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் தான் தலாய் லாமா அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பெண் தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது குறித்த தற்போதைய தலாய் லாமாவின் பதில் ஒரு சிறிய நகைச்சுவைக்காக கூறப்பட்டதாகும். இதனால் அவருடைய புனிதத்தன்மை இழக்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும் நகைச்சுவைக்காக அவர் கூறிய கருத்து மக்களின் மனங்களை புண்படுத்தியிருந்தால், அதற்காக தலாய் லாமா மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
தலாய் லாமா தன் வாழ்நாள் முழுவதும் பெண் உரிமைகளுக்கு ஆதரவான கருத்தையே கூறி வருகிறார். அவர் வலியுறுத்தி வரும் பாலின சமத்துவத்திற்கு பல்வேறு உலக நாடுகளும் வரவேற்பு தெரிவித்ததும் அறிக்கையில் நினைவுகூறப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அகதிகள் சொந்த நாட்டுக்குத் திரும்புவதே நல்லது என்று தலாய் லாமா கூறிய கருத்தும் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவருடைய அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,