காசு வாங்கிட்டு ஓட்டு போட 'அட்வைஸ்' செய்த கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
டெல்லி: பிற கட்சிகளிடம் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டாலும், ஆம் ஆத்மிக்கே வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கு டெல்லியின் நவாடா பகுதியில் உத்தம் நகர் சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் நரேஷ் பால்யனுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் பேசுகையில் "இது தேர்தல் நேரம். வாக்களிப்பதற்காக காங்கிரஸும் பாஜகவும் உங்களுக்கு லஞ்சம் தர முன்வருவார்கள்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான் அவை. எனவே, அதை வேண்டாம் என்று மறுக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு செலுத்துங்கள். கடந்த 65 ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி வந்த அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட இது தான் சரியான தருணம்." என்று கூறியிருந்தார்.
பணம் பெற்று வாக்களிப்பது சட்டப்படி தவறு என்பதால், கேஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்தன. இந்த பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு கேஜ்ரிவாலுக்கு இன்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் வியாழக்கிழமைக்குள் கேஜ்ரிவால் பதில் அளிக்க கெடு விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.












Click it and Unblock the Notifications