அதாவது நாங்க என்ன சொல்றோம்னா.. இந்தி டிவிட் சர்ச்சை குறித்து பாஜக “வெளக்கம்”!
டெல்லி: இந்தியில் டிவிட்களை அனுப்புவது தொடர்பான சர்ச்சை வெடித்து விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி மூலம் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தியை புரமோட் செய்யும் மத்திய அரசின் முடிவு நியாயமானதே என்று பாஜக கூறியுள்ளது. மேலும் இது நாட்டை ஒன்றாக இணைக்க வகை செய்யும் என்றும், ஆங்கிலத்தை அவமானப்படுத்தும் செயல் அல்ல இது என்றும் நக்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நக்வி கூறியுள்ளதாவது...
தேசிய மொழி
இந்தி தேசிய மொழியாகும். இந்தியாவின் இதயமாகும். இந்திக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது ஆங்கிலத்தை அவமதிக்கும் செயல் அல்ல.
பிராந்திய மொழிகளும் ஓ.கேதான்.
இந்தி மட்டுமல்ல பிராந்திய மொழிகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதை பாஜக வரவேற்கவே செய்யும்.
ஒரு மாதிரியான கலவை
தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜரத்தி, பெங்காலி, அஸ்ஸாமிஸ், உருது மற்றும் பிற பிராந்திய மொழிகள் அடங்கிய கலவைதான் இந்தி.
யாருமே புரமோட் செய்யலையே ஜி!
காந்தி, நேரு, தீன் தயாள் உபாத்யாய், ராம் மனோகர் லோஹியா ஆகியோர் இந்தியை வளர்க்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி பின்னர் நின்று போய் விட்டது. இது துரதிர்ஷ்டவசமானது.
ஆனா நாங்க விட மாட்டோம்ல..
ஆனால் தற்போதைய அரசு இந்தியை அனைத்து வகையிலும் வளர்க்க, முன்னுரிமைப்படுத்த முயற்சிக்கும், அதில் பின்வாங்காது.
மோதல் எல்லாம் இல்லை…
இந்தி, ஆங்கிலம் இடையே எந்த மோதலும் இல்லை. இந்தியை எதிர்ப்பது சரியான செயல் அல்ல. அவர்கள் இந்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே போலத்தான் பிற பிராந்திய மொழிகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். அவற்றுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் என்பதே பாஜகவின் கருத்தாகும் என்றார் நக்வி.