நீடிக்கும் வன்முறை.. இன்று கூடுகிறது மணிப்பூர் சட்டமன்றம்! குக்கி எம்எல்ஏக்கள் புறக்கணிக்க முடிவு
இம்பால்: மணிப்பூரில் கலவரம் தொடங்கி 4 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இன்று அம்மாநில சட்டமன்றம் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தை கூட்டுகிறது. இதில் குக்கி சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. இந்த வன்முறை காரணமாக 160 பேர் உயிரிழந்துள்ளனர், 60,000க்கும் அதிகமானோர் பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவராத பாஜக முதலமைச்சர் பிரேண் சிங்கை ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தேசிய எதிர்க்கட்சிகள் முடக்கியதற்கும், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததற்கும் இந்த கலவரம்தான் காரணம்.

இந்த சூழலில்தான் இன்று சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. மணிப்பூர் அரசை பொறுத்தவரை 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும். இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. இந்நிலையில் மாநில அமைச்சரவை இரண்டு முறை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து கவர்னர் அனுசுயா உய்கே சட்டசபையின் ஒரு நாள் மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதித்துள்ளார். கலவரங்கள் தொடங்கியதற்கு பிறகு கூட்டப்படும் முதல் கூட்டம் இது என்பதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த கூட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகள் மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக தலைமையிலான மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யும். அதேபோல மோதலை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில தீர்மானங்களை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
மறுபுறம் எதிர்க்கட்சியான காங்கிரஸ், 4 மாத கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர தவறியதற்காக பாஜக அரசை கடுமையாக விமர்சிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த கூட்டத்தில் நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) மற்றும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் பங்கேற்கின்றனர். மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாஜகவுக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இந்த கூட்டணியில் குக்கி சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்களும் இருக்கின்றனர்.
இந்த சட்டமன்ற கூட்டத்தை குக்கி சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். எனவே பாஜகவைச் சேர்ந்த 7 பேர் உட்பட 10 குக்கி எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும், கலவரத்திற்கு பொறுப்பேற்காமல், மாநிலத்தில் நடந்த சம்பவத்தை நீர்த்துப்போக செய்யவே இந்த கூட்டம் கூட்டப்படுவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர். எனவே இன்று நடைபெறும் சட்டசபை கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications