குஜராத்தில் 'கூட்டாக' களமிறங்கும் சிறுபான்மையினர்.. பிரியும் வாக்கு வங்கி? ஆஹா பாஜவுக்கு சாதகமா?
காந்திநகர்: குஜராத் தேர்தலில் 'இஸ்லாமியர்களை' வேட்பாளர்களாக பிரதான கட்சிகள் அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தாத நிலையில், இதர கட்சியிலிருந்தும் சுயேட்சையாகவும் அவர்கள் களமிறங்கியுள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கான வாங்கு வங்கி அதிகம் உள்ள பகுதிகளில் இவர்கள் களம் இறங்கியுள்ளனர். மாநிலத்தில் வரும் 1ம் தேதியும் 5ம் தேதியும் தேர்தல் இரண்டு கட்டங்களாக தொடங்குகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக-காங்கிரஸ் கடுமையாக முயன்று வருகையில் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில்தான் இஸ்லாமியர்களுக்கு எத்தனை பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பேத்கரை அசிங்கப்படுத்திட்டாங்க.. காங்கிரஸ் மீது பழியை போட்ட அமித்ஷா! பரபரத்த குஜராத் தேர்தல் களம்
குஜராத்
மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் 40 தொகுதிகள் தனித் தொகுதிகள். இந்த 40லும் வெற்றி பெற்றால் ஆட்சியை எளிதாக கைப்பற்றி விடலாம். ஆனால் இதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாதி காங்கிரஸ் எனில் அதற்கு சற்று குறைவாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. எனவே இந்த 40 தொகுதிகளிலும் இரு கட்சிகளும் தீவிர பிசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் சிறுபான்மையினர் வாக்குகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் பாஜக இந்த தேர்தலில் ஒரேயொரு 'இஸ்லாமிய' வேட்பாளரைக்கூட களத்தில் நிற்கவைக்கவில்லை.
சிறுபான்மையின வேட்பாளர்கள்
எனவே காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியின் சார்பில் 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆம் ஆத்மியும் பெயருக்கு 2 இஸ்லாமிய வேட்பாளர்களை அறிவித்தது. இவ்வாறு இருக்கையில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 60%-80% வரை இஸ்லாமியர்கள்தான் களம் இறங்கியுள்ளனர். அதாவது, சூரத் மாவட்டத்தில் உள்ள லிம்பாயத் சட்டசபை தொகுதி இஸ்லாமியர்கள் பலம் வாய்ந்த தொகுதி. ஆனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளரை களமிறக்கவில்லை. இதனால் அவர்கள் இதர கட்சிகள் சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிட முன்வந்துள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 80% பேர் இஸ்லாமியர்கள்.
பாஜகவில் பூஜ்யம்
அதேபோல, அகமதாபாத்தில் உள்ள பாபுநகர் தொகுதியிலும் இஸ்லாமியர்கள் அதிகம். இங்கும் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளரை களம் இறக்கவில்லை. இந்த தொகுதியிலிருந்து போட்டியிடும் 29 பேரில் 10 பேர் இஸ்லாமியர்கள். இந்த தொகுதியில் 28% சிறுபான்மையினரின் வாக்குகள் இருக்கின்றன. சரி 28% தானே என்று என்று கட்சி எண்ணி காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் விட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் 35% இஸ்லாமிய வாக்கு வங்கி இருக்கும் ஜுஹாபுராவின் தொகுதியில் கூட காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளரை நிற்கவைக்கவில்லை. இந்த தொகுதியில் போட்டியிடும் 15 பேரில் 9 பேர் இஸ்லாமியர்கள்.
காங்கிரஸ் 6
ஆனால் அடுத்து இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளர்களையே நிறுத்தி வைத்திருக்கிறது. இவ்வாறு களமிறக்கிய 6 தொகுதியில் 4 தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி 50%க்கும் அதிகமாகும். ஆனாலும் இதிலும் பிரச்னை மேலெழுந்திருக்கிறது. அதாவது, சூரத் (கிழக்கு) தொகுதியில் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளரை களமிறக்கியுள்ளது. இங்கு 22% பேர் இஸ்லாமியர்கள். மொத்தமாக இந்த தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 12 பேர் இஸ்லாமியர்கள். இதனால் வாக்கு வங்கி சிதறடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதர தொகுதிகள்
அதேபோல அகமதாபாத்தின் தரியாபூர் தொகுதியில் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இங்கு மொத்தம் 7 பேர் போட்டியிடுகிறார்கள். ஆனால் அதில் 5 பேர் இஸ்லாமியர்கள். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் தன்னுடைய மதத்தை சார்ந்தவர்களிடமிருந்தே போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் இந்த தொகுதியிலும் வாக்கு வங்கி பிரியும். தொகுதியில் மொத்தம் 46% பேர் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர். இதேபோல ஜமால்பூர்-காடியா, பரூச்சின் வக்ரா என இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் அதே மதத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 9% பேர்தான் இஸ்லாமியர்கள். ஆனால் அவர்கள் சார்பில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது பாஜகவுக்குதான் சாதகத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு கலவரம் நடைபெற்ற கோத்ரா பகுதியிலும் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.