குஜராத் மாடல்.. 4,000 காலேஜ், 600 ஐடிஐ.. இதுதான் வளர்ச்சி.. பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், இன்று மதியம் சுரேந்திர நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றியுள்ளார்.
"ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவே யாத்திரை நடத்துகிறார்கள்" என்று ராகுல்காந்தியின் 'பாரத் ஜடோ' யாத்திரையை பிரதமர் விமர்சித்துள்ளார்.
மேலும், "குஜராத் என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். மாநிலம் முழுவதும் சுமார் 4,000 கல்லூரிகள், 600 ஐடிஐக்கள் இருக்கின்றன. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்வி முறையையே மாற்றியுள்ளன" என்று கூறியுள்ளார்.

பரப்புரை
நேற்று முன்தினம் (நவ.19) பிரதமர் மோடி குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்கினார். மூன்றாவது நாளாக நீடித்துள்ள இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக 'சுரேந்திர நகரில்' இன்று மதியம் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "குஜராத்தில் வளர்ச்சி சாத்தியமில்லை என்று கூறினார்கள் ஆனால் நான் அதை சாத்தியப்படுத்தினேன். ஒவ்வொரு முறையும் நான் ஏதாவது நலத்திட்ட பணிகளை செய்யும் போது அதனை காங்கிரஸ் விமர்சிக்கும். சாத்தியமில்லை என்று கூறும். ஆனால் நான் அதை முழுமையாக சாத்தியப்படுத்தி காட்டுவேன்.

விமர்சனம்
அப்படி செய்யப்பட்டதுதான் குஜராத் கிராமங்களுக்கான மின்சார வசதி. இது குறித்து நான் பேசுகையில் இது சாத்தியமில்லை என்ற வழக்கம் போல காங்கிரஸ் கூறியது. ஆனால் நான் என் மக்களுக்காக உழைத்தேன். தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. காங்கிரஸ்காரர்கள் இருந்தபோது இந்த மாநிலத்தில் ஒரு சைக்கிள் கூட அவர்கள் தயாரிக்கவில்லை. ஆனால் தற்போது விமானே தயாரிக்கப்பட இருக்கிறது. குஜராத் வளர்ந்துள்ளது. இதற்கு பாஜகதான் காரணம். ஆனால் இதையெல்லாம் பார்த்து அவர்கள் என்னை பாராட்டாமல் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கிறார்கள்.

கல்வி நிலையங்கள்
நான் சாதாரணமானவன்தான். உங்களைப்போல அரச குடும்பத்திலிருந்து வந்தவன் கிடையாது. ஆனால் என்னை நீங்கள் சாக்கடை புழு என்று விமர்சித்தீர்கள். நான் வேலைக்காரன்தான், மக்களின் வேலைக்காரன். ஆனால் என்னை தாழ்ந்த சாதி என்றும் விமர்சித்துள்ளீர்கள். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எனவே மாநிலத்தின் வளர்ச்சி குறித்து விவாதியுங்கள், என்னை பற்றியல்ல. மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள். தற்போது மாநிலம் முழுவதும் 4,000 கல்லூரிகள் இருக்கின்றன. அதேபோல 600 ஐடிஐகள் இங்கி வருகின்றன.

யாத்திரை
மாநிலத்தின் கல்வி முறையே முற்றிலும் மாறியுள்ளது. இதெல்லாம் பாஜக ஆட்சியில்தான் சாத்தியமானது. வளர்ச்சி என்றால் குஜராத். குஜராத் என்றால் வளர்ச்சி. இப்போது சிலர் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள்தான் தற்போது யாத்திரை மேற்கொண்டுள்ளனர்" என்று விமர்சித்துள்ளார். இதனையடுத்து பருச் மற்றும் நவ்சாரியில் ஆகிய பகுதிகளிலும் பிரதமர் பிரசாரம் செய்ய இருக்கிறார். மாநிலம் முழுவதும் வரும் 1ம் தேதி முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் தொங்குகிறது. அடுத்தது 5ம் தேதி இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதன் முடிவுகள் வரும் 8ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications