ஆச்சாரியா வாதம் செவ்வாய்க்கிழமை நிறைவு: அன்றே வெளியாகிறது ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு தேதி?
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, வரும் செவ்வாய்க்கிழமைக்கு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றும் கர்நாடக தரப்பில், ஆச்சாரியா தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். இதன்பிறகு நீதிபதிகள் தீர்ப்பு தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா வாதத்தை முன்வைத்தனர்.

ஜெயலலிதா, சசிகலா தரப்பு
ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் வாதிட்டார். இதையடுத்து சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே தனது வாதத்தை முன்வைத்தார்.

ஆச்சாரியா வாதம்
இதையடுத்து கர்நாடக தரப்பில் பதில் வாதத்தை தாக்கல் செய்ய ஆச்சாரியாவுக்கு 2வது சுற்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் நேற்று வாதத்தை தொடங்கினார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சாரியா வாதம் முன் வைத்தார்.

சொத்து மதிப்பு
2வது நாளாக நேற்றும், ஆச்சாரியா வாதத்தை தொடர்ந்தார். அப்போது, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ரூ.66 லட்சம் என சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் சொத்து மதிப்பை ரூ.13 லட்சம் என குறைத்து காட்டியுள்ளனர் என்று ஆச்சார்யா குற்றம்சாட்டினார்.

சின்னம்மா
சசிகலா சின்னம்மா என்று அதிமுகவினரால் அழைக்கப்படுபவர் என்றும், அவர் தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக ஜெயலலிதாவுக்கு வருவாய் கிடைத்ததாகவும் ஆச்சாரியா வாதம் செய்தார். இன்றும் ஆச்சாரியா வாதத்தை தொடர்ந்தார்.

செவ்வாய்க்கிழமை
வியாழக்கிழமையான இன்றுடன், ஆச்சாரியா வாதத்தை முடித்துக்கொள்வார் என்றும், தீர்ப்பு தேதி இன்றே வெளியாக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சாரியா, தனக்கு இன்னமும் வாதாட நேரம் தேவை என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமைக்கு, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றும் ஆச்சாரியா தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். இதன்பிறகு நீதிபதிகள் தீர்ப்பு தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications