பாஜகவின் எழுச்சியும், காங்கிரஸின் வீழ்ச்சியும் – தொடரும் வரலாறு!
லக்னோ: மகராஷ்டிரா தேர்தலின் மூலம் மீண்டும் தன்னுடைய பலத்தை காங்கிரஸுக்கு எதிராக நிரூபித்துள்ளது பாஜக. இத்தேர்தலின் மூலமாக தேர்தல் வரலாறு மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னர் 11 இடங்களுக்காக உத்தர பிரதேசத்திலும், சில இடங்களுக்காக ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து பல அரசியல் ஆய்வாளர்கள் மோடி அலை முடிந்தே விட்டது என்ற வகையில் இந்த இடைத்தேர்தலின் முடிவில் எழுதவே ஆரம்பித்து விட்டார்கள். மொத்தம் தேர்தல் நடந்த 11 இடங்களில், மூன்றே இடங்களில்தான் வெற்றி வாய்ப்பு கிட்டியது பாஜக கட்சிக்கு.
லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 80 இடங்களில் 72 இடங்களுக்கு வெற்றி வாகை சூடி தன்னுடைய செயல்திறனை எடுத்துக்காட்டிய பாஜக, அதற்கு எதிர்மாறாக இந்த இடைத்தேர்தலில் சறு்கியது.
அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு தெம்பூட்டும் வகையி்ல் அதற்கு நல்ல வெற்றி கிடைத்தது.
இந்நிலையில்தான் மகராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தலில் மோடி மேஜிக் இன்னும் மறையவில்லை என்றும், சிறுசிறு ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்ட போதிலிம் மோடி அலையானது இன்னும் வலிமையாகத்தான் மாறுகின்றது என்று நிரூபித்துக் காட்டியுள்ளது பாஜக.
குறிப்பாக இந்த முறை மோடி அலையுடன், அமீத் ஷாவின் இணைந்த பலத்துடன் பாஜக இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
எப்போதுமே லோக்சபா தேர்தல் முடிவுக்கும், சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கும் இடையே வித்தியாசம் இருக்கும். ஆனால் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு, லோக்சபா தேர்தலில் கிடைத்தது போலவே வெற்றி கிடைத்திருப்பது ஒரு ஆச்சரியமாகும்.
ஹரியானாவில் வரலாறு காணாத எழுச்சி
ஹரியானாவில் பாஜக கடந்த 2009 சட்டசபைத் தேர்தலின்போது வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால் இந்த முறை 47 இடங்களை அது வென்றுள்ளது. இது மிகப் பெரிய சாதனை.
டெல்லிக்கு அருகில் ஹரியானா இருப்பதால் இந்த வெற்றி சாத்தியமானதாகவே கருதப்படுகிறது. இது அமீத் ஷா மற்றும் மோடியின் கூட்டு சாதனை என்றும் கட்சியினர் வர்ணிக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் நம்பர் ஒன்
மகாராஷ்டிராவில் முதல் முறையாக அக்கட்சி நம்பர் ஒன் கட்சியாக மாறியுள்ளது. ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இதுவரை சிவசேனாவின் கூட்டாளி என்ற சின்ன அந்தஸ்துடன் வலம் வந்த பாஜக இன்று ஆட்சியமைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனித்துப் போட்டியிட அது முடிவு செய்தது சரியான முடிவு என்பதையும் நிரூபித்துள்ளது.
முதல் முறையாக 100 தொகுதிகளைத் தாண்டி அது வெற்றி பெற்றுள்ளது. இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த தேசியவாத காங்கிரஸும், பாஜகவை உதாசீனப்படுத்திய சிவசேனாவும் இப்போது பாஜகவுக்கு ஆதரவு தர ஆர்வமாக உள்ளன.
ஆட்சியமைக்க 22 பேர் தேவை
தற்போது பாஜகவுக்கு சொந்தமாக 122 எம்.எல்.ஏக்கள்ளனர். இன்னொரு எம்.எல்.ஏ பாஜக ஆதரவாளர் ஆவார். மேலும் 22 தொகுதிகள் கிடைத்தால் ஆட்சியை அமைக்க முடியும். இந்த ஆதரவை தர தேசியவாத காங்கிரஸ் முன்வந்துள்ளது. அதேசமயம், சிவசேனாவும் ஆதரவுத ர முன்வரும் என்று தெரிகிறது.
இந்த விஷயத்தில் யாருடைய ஆதரவை பாஜக எடுத்துக் கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை அது எடுத்துக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.
ஆச்சரியம் தரும் தேசியவாத காங்கிரஸ்
இந்தத் தேர்தலில் இன்னொரு ஆச்சரியம், தேசியவாத காங்கிரஸ் கட்சி தானாக முன்வந்து ஆதரவைத் தந்தது. அதுவும் நிபந்தனையில்லாமல். ஆனால் பாஜகதான் இதை ஏற்கத் தயங்குகிறது. காரணம், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பலர் மீது ஊழல் புகார்கள் குவந்திருப்பதால். அவர்கள் பாஜகவைப் பயன்படுத்தி தாங்கள் தப்பிக்க முயலலாம் என்று கருதப்படுகிறது.
காங்கிரஸ் கதி
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது மகாராஷ்டிராவில் கரையத் தொடங்கி விட்டது. அக்கட்சியின் பல முக்கியத் தலைவர்கள் வீழ்ந்து விட்டனர். ராகுல் காந்தி மகாராஷ்டிர தேர்தல் சமயத்தில் அதை விட்டு விட்டு ஹூட் ஹூட் புயலுக்காக விசாகப்பட்டனம் போய் விட்டார். மகாரஷ்டிராவை அவர் கண்டுகொள்ளவில்லை.
மொத்தத்தில் மோடியின் அரசானது, லோக்சபா முடிவுகள் பொய்யல்ல என்று நிரூபித்துக் காட்டியுள்ளது. .அடுத்து, பொருளாதார சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளில் அக்கட்சி கவனம் செலுத்த முடியும். அடுத்த தேர்தல் வரை பாஜக சற்று நிம்மதியுடன் பணியாற்றவும் முடியும்.