எல்லை தாண்டி வருவதால் இந்திய மீனவர்களை கைது செய்கிறோம்.. டெல்லியில் இலங்கை பிரதமர் பரபர பேட்டி
டெல்லி: இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார். பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இந்தியா கடந்த வாரம் முடிவெடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய சார்க் உறுப்பு நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் சார்க் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ரணில் விக்கிரமசிங்கே இன்று சந்தித்துப் பேசினார். இன்று மாலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவர் சந்திக்கிறார். தொடர்ந்து இந்தியப் பொருளாதார உச்சி மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்கும் அவர் அன்று மாலையே இலங்கை திரும்புகிறார்.

முன்னதாக டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை ரணில் விக்ரமசிங்கே மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மதியம், பிரதமர் மோடியுடன் அவர் சந்திப்பு நடத்தினார். பின்னர் டெல்லியில் நிருபர்களிடம் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:
இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சினைகளை தீர்க்க, இரு நாட்டு மீனவர் அமைப்புகளும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்துவது அவசியம். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போதுதான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிவருகிறது. நவம்பர் முதல் வாரத்தில், இரு நாட்டு வெளியுறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் இப்போது மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications