யோகா... கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த பாபா ராம்தேவின் சொந்த ஊரில் ஈ, காக்கா இல்லையே!
அகமதாபாத்தில் 3 லட்சம் பேருடன் யோகா பயிற்சி மேற்கொண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த பாபா ராம்தேவின் சொந்த கிராமத்தில் கூவி கூவி அழைத்தாலும் யாரும் வரவில்லை.
சண்டிகர்: உலக யோகா தினத்தையொட்டி, 3 லட்சம் பேருடன் யோகா செய்து கின்னஸ் சாதனைக்கு முயற்சித்தார் பாபா ராம்தே. ஆனால் அவரது சொந்த கிராமத்தில் யோகா செய்ய ஆள் இல்லாமல் போனதாம்.
உலக யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி 3 -ஆவது ஆண்டான நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் யோகா செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதேபோல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாபா ராம்தேவ் தலைமையில் பாஜக தலைவர் அமித்ஷா, மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைவரும் டான்ஸ் ஆடி யோகா செய்தனர்.
அகமதாபாத்தில் 3 லட்சம் பேரை ஒன்றாக திரட்டி யோகா செய்து பாபா ராம்தேவ் கின்னஸ் முயற்சியாக செய்தார். இதற்காக 5 மைதானங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் ராம்தேவின் சொந்த ஊரான ஹரியாணா மாநிலம், சைதாலிபூரில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 பேர் தான் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.