ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப் பதிவு; 305 பேர் வேட்பாளர்கள்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கியது. கடந்த ஓராண்டு காலமாக ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள் முடங்கி இருந்தன.
இதனையடுத்து லடாக் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. தற்போது ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் இன்று 3-ம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய தேர்தலை 305 வேட்பாளர்கள் எதிர்கொள்கின்றனர். மொத்தம் 7.37 லட்சம் பேர் வாக்காளர்கள். டிசம்பர் 19-ந் தேதி வரை மேலும் 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெறும். அதன்பின்னர் டிசம்பர் 22-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலி பாஜக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி ஆகியவை களத்தில் உள்ளன. இவற்றுடன் ஜம்மு தனி மாநிலம் கோரும் 2 கட்சிகளும் களத்தில் உள்ளன. இன்றைய வாக்கு பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.