சுப்ரீம் கோர்ட்டை குண்டு வைத்து தகர்ப்போம்: மர்ம கடிதத்தால் பரபரப்பு
டெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள கோவிலுக்கு வெளியே நேற்று 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர், 120 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துபாயில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில் உச்ச நீதிமன்றத்தில் குண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது.
விசாரணையில் அந்த மிரட்டல் உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் இன்டர்ன்ஷிப் செய்வோர் நீதிமன்றத்திற்குள் நுழைய ஒரு மாத காலம் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்களுடன் தினமும் ஏராளமான இன்டர்ன்ஷிப் மாணவர்கள் வருவது வழக்கம்.
மிரட்டல்:
முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு மிரட்டல் கடிதம் வந்தது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த அமர்வில் நீதிபதி மிஷ்ராவும் ஒருவர். அவருக்கு வந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது, நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், உங்களை கொலை செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு வந்த கடிதத்தை யார் எழுதினார்கள் என்பதை போலீசாரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.