ஆப்கான்: பறக்கும் விமானத்தில் தொங்கியபடி பயணித்த 3 பேர் நடுவானில் இருந்து விழுந்து பலி- ஷாக் வீடியோ
காபூல்: ஆப்கான் விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் உலகை உலுக்கிக் கொண்டிருக்க்கின்றன. அமெரிக்காவின் விமானம் ஒன்றில் தொங்கியபடி பயணித்த 3 பேர் நடுவானில் இருந்து அடுத்தடுத்து கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிவிட்டன. அமெரிக்க தூதரக பணிகளுக்காக மட்டும் சில ஆயிரம் அமெரிக்க படையினர் காபூல் விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளனர்.

தாலிபான்கள் பிடியில் காபூல்
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களையும் தாலிபான்கள் எனப்படும் இஸ்லாமிய கடும் கோட்பாட்டாளர்கள் கைப்பற்றி உள்ளனர். தலைநகர் காபூல், அதிபர் மாளிகை என அனைத்தும் இப்போது தாலிபான்கள் வசம்.

உச்ச பதற்றத்தில் ஏர்போர்ட்
இதனையடுத்து ஆப்கானிஸ்தானை விட்டு அதிபர் கனி தப்பி ஓடினார். அதேபோல் பெரும்பாலான எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டனர். பொதுமக்களும் தாலிபான்கள் ஆட்சியில் வாழ முடியாது என்பதால் கிடைத்த விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

இடம்பிடிக்க போராட்டம்
காபூல் விமான நிலையத்தில் நிலைமை மோசமாகவே அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா மட்டும் தமது நாட்டு மக்களை மீட்பதற்காக விமானங்களை தரை இறக்கியது. அப்போது கூடியிருந்த ஆப்கான் மக்கள் நூற்றுக்கணக்கானோர் விமானத்தை சூழ்ந்து கொண்டு ஏதேனும் ஒரு வழியில் உள்ளே இடம்பிடித்துவிட முடியாதா என போராடிப் பார்த்தனர்.
|
பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்து பலி
ஆனாலும் அமெரிக்கா விமானியோ இத்தனை 100 பேர் ஒன்று திரண்டு வருவதையும் பொருட்படுத்தாமல் விமானத்தை இயக்கினார். அப்போது சிலர் விமானத்தின் டயரை பிடித்து தொங்கியபடியே பயணித்தனர். விமான நிலையத்துக்கு சற்று மேலேயே உயரமாக பறக்க தொடங்கிய போது அப்படி தொங்கிய நிலையில் பயணித்த 3 பேர் பல்லாயிரக்கணக்கானோர் கண் முன்னாலேயே கீழே விழுந்து மாண்டு போயினர். இந்த வீடியோக்கள்தான் சமூக வலைதளங்களை இப்போது ஆக்கிரமித்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications