எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் சிறுவர்கள் கைது- பாக்.ரேஞ்சர்களிடம் ஒப்படைக்க முடிவு
ஜெய்சல்மர்: பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த 3 சிறுவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
12 முதல் 14 வயதிற்குட்பட்ட சலிம், சஜன் சாவல் என்ற அந்த 3 சிறுவர்களும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள குரியா பேரி கிராமத்திற்கு அருகே உள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த போது, எல்லை பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர். இந்த மூவரும் காணாமல் போன தங்கள் கால்நடைகளை தேடி வழிதவறி வந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து தீங்கு தரும் பொருள் அல்லது ஆவணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இருப்பினும், கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்துள்ளனர் பாதுகாப்பு படையினர்.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் இவ்விவகாரத்தைக் கையாண்டு, அதிகாரப்பூர்வ சம்பிரதாயங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.