27 ஆண்டுக்கு முந்தைய ஊழல் வழக்கு- முன்னாள் மத்திய அமைச்சர் துங்கானுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை!
டெல்லி: 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.கே.துங்கானுக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம்.
1988 ஆம் ஆண்டு மத்திய நகர்ப்புற இணை அமைச்சராக இருந்தவர் பி.கே. துங்கன். இவர் 1975 முதல் 1979 ஆம் ஆண்டு வரை அருணாசலப் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக பதவி வகித்தவர்.
நாகலாந்து மாநில நீர்த்தேக்கங்களை புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட மத்திய அரசு ஒதுக்கிய ரூ2 கோடியில் முறைகேடு செய்ததாக துங்கான் உட்பட 4 பேர் மீது 1988-ல் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 1994-ம் ஆண்டு துங்கன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் துங்கான் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 69 வயதாகும் துங்கன் உட்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று வெளியிடப்படும் கூறப்பட்டிருந்தது. டெல்லி சி.பி.ஐ. தனிநீதிமன்றம் இன்று துங்கானுக்கு 4 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. மேலும் ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்தது.
எஞ்சிய 2 குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனையும் மற்றொரு குற்றவாளி மகேஷ் மகேஷ்வரி என்பவருக்கு 2 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.