யாகூப் மேமன் தூக்குக்கு பழிக்குப் பழி.. தாயிடம் டைகர் மேமன் சபதம்
மும்பை : மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பழிவாங்கப்போவதாக அவனது சகோதரன் டைகர் மேமன் சபதம் செய்துள்ளான்.
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன், டைகர் மேமன், தன் தாய் ஹனிபாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறான். அழுதுகொண்டே பேசிய டைகரின் தாய் ஹனிபாமேமனை சமாதானப்படுத்திய டைகர் மேமன், 'யாகூபின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவேன் என்றும் இதற்கு காரணமானவர்களுக்கு பதிலடி கொடுப்பேன் எனவும் கூறியுள்ளான்.
இதைக்கேட்ட, ஹனிபா, வன்முறையை கைவிடும்படி கூறினார். முதல் பலியாக யாகூபை இழந்தது போதும் என்றும் மேலும் உயிர்பலியை காண விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
தாய் ஹனீபா மேமனுடன் டைகர் மேமன் பேசிய இந்த தகவல்களை டெல்லி மற்றும் மும்பையை சேர்ந்த உளவுத்துறை நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
இதில் அவன் பாகிஸ்தானில் இருந்து பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவன் தனது தோற்றத்தை மாற்றி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.