பெண் போலீசார், புகார் கொடுக்க வரும் பெண்களுடன் உல்லாசம்.. திருப்பதி டிஎஸ்பி மீது பரபரப்பு புகார்
ஹைதராபாத்: போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பெண்கள், தனக்கு கீழே பணிபுரியும் பெண் போலீசார் உள்ளிட்ட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக திருப்பதி, போலீஸ் டிஎஸ்பி சீனிவாசலு மீது அவரது 2வது மனைவி தொலைக்காட்சியில் போட்டோ ஆதாரங்களோடு குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி டிஎஸ்பி சீனிவாசலுவின் 2வது மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்ட இளம் பெண், ஏபிஎன் என்ற தொலுங்கு டிவி சேனலில் முகத்தை துணியால் மூடியபடி பரபரப்பு பேட்டியொன்றை கொடுத்தார்.
அதில் அவர் கூறியதாவது: 2006ம் ஆண்டு அனந்த்பூர் மாவட்டத்தில் ஒரு வழக்குத்தொடர்பாக போலீஸ் நிலைத்தில் புகார் அளிக்க சென்றேன். இதுதொடர்பாக அவ்வப்போது சீனிவாசலுவை போனில் தொடர்பு கொண்டேன். இதனால் அவரோடு அவ்வப்போது பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது, அவர் என்னிடம், தான் ஏற்கனவே திருமணம் முடித்து விவாகரத்து பெற்றவர் என்றும், இதனால், தற்போது தனிமையில் வாடுவதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, நானும், அவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். பின்னர், எனது வலியுறுத்தலின் பேரில் திருமணம் செய்துகொண்டார். அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தோம்.
கடந்த 2013ம் ஆண்டு திருப்பதிக்கு சீனிவாசலு இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் தொடர்பு கொண்டாலும் பேச மறுத்தார்.
சந்தேகமடைந்த நான் திருப்பதிக்கு சென்று எனக்கு தெரிந்த போலீசாரிடம் விசாரித்தேன். அப்போது, சீனிவாசலுவுக்கு திருப்பதியில் ஒரு குடும்பம் இருப்பது தெரியவந்தது. அவர் எத்தனையாவது மனைவி என்பது தெரியாது.
மேலும், போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் உள்ளிட்ட பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். மேலும், தனக்கு கீழ் பணிபுரியும் பெண் போலீசாரை மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதேபோல், தனது வீட்டில் வேலை செய்யும் 16 வயது சிறுமியையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் போலீசார் புகாரை வாங்க மறுக்கின்றனர்.
இவ்வாறு கூறிய அந்த பெண், பல போட்டோ ஆதாரங்களை வெளியிட்டார். இந்த பேட்டி ஆந்திர காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.