"வலுவான தலைவர்னா 56 இன்ச் மார்பு இருக்கனுமா என்ன!" பிரதமர் மோடியை மறைமுகமாக சாடும் திரிணாமுல் எம்பி
கொல்கத்தா: வலுவான தலைவர் யார் என்பதை விளக்கிய திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் பேசி உள்ளது சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தாவும் மற்ற திரிணாமுல் தலைவர்களும் பாஜகவை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர்.
ஜஸ்ட் 10 நிமிஷம் தான்.. 6 பேர் காலி.. சரசரவென சுட்டுத்தள்ளிய 22 வயது இளைஞர்.. நடுங்கும் சிகாகோ
இதனிடையே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா வலிமையான தலைவராக இருக்க 56 இன்ச் மார்பு தேவையில்லை என்று பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
56 இன்ச் மார்பு
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மஹுவா மொய்த்ரா கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய மஹூவா மொய்த்ரா, "நவீன் பட்நாயக் ஒரு வலுவான தலைவர், மம்தா பானர்ஜி வலிமையான தலைவர். வலிமையான தலைவராக இருக்க ஒவ்வொரு நாளும் 56 அங்குல மார்பை வைத்துக் கொண்டு, தினமும் அதை அடித்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவை இல்லை" என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடி
2014 தேர்தல் சமயத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய நரேந்திர மோடி, தான் 56 இன்ச் கொண்ட வலுவான தலைவர் என்று குறிப்பிட்டு இருந்தார். குஜராத் மாநிலத்திற்கு இணையாக உத்தரப் பிரதேசம் வளர்ச்சியடைய 56 இன்ச் மார்பு தேவை என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைக் கிண்டல் செய்யும் வகையிலேயே இப்போது மஹூவா மொய்த்ரா இப்படி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நெகிழ்வான அமைப்பு
தொடர்ந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அவசியம் குறித்துப் பேசிய மஹூவா மொய்த்ரா, "இதை முதலில் முன்மொழிந்தவர் மம்தா பானர்ஜி. பிரச்சினைகளை விவாதித்து பாஜகவை எதிர்கொள்வோம் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். நமது அரசியலமைப்பு வரைவு ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி இரண்டையும் குறிக்கும் என்று கூறினார். முதல் நாளில் இருந்தே நாம் ஒரு நெகிழ்வான அமைப்பைக் கொண்டிருந்தோம்.
முதல் அடி
ஆனால், இதுவே தான் இப்போது பிரச்சினையாக மாறி உள்ளது. இந்த நெகிழ்வான தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் தவறான முன்னெடுப்புகளைச் செய்யும் போது பிரச்சினைகள் தொடங்குகிறது. கூட்டாட்சியில் அனைத்துமே சாத்தியம் தான். 65 ஆண்டுகளாக இருந்த திட்டக் கமிஷன் அகற்றப்பட்டபோது கூட்டாட்சி முறைக்கு முதல் அடி விழுந்தது. திட்ட கமிஷன் ஒருமித்த உடன்படிக்கையின் அடிப்படையில் மானியங்களை வழங்கியது. ஆனால், இப்போது இருக்கும் நீதி ஆயோக் அதன் விருப்பத்தின் அடிப்படையில் மானியங்களை வழங்குகிறது.
மாநிலத்தின் பங்கு
கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு மிகவும் மோசமான நிதிநிலையைக் கொண்டு இருக்கிறது. அதை ஈடுகட்ட தற்போது மாநிலங்களை வஞ்சிக்கிறார்கள். அவர்கள் செஸ் வரியை அதிகரித்தனர், அவர்கள் மாநிலங்களின் ஜிஎஸ்டி பங்கைச் சரியான நேரத்தில் கொடுக்கவில்லை. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தைக் கூட கூட்டவில்லை. கூட்டாட்சியின் இந்தத் தூண்கள் உடைந்துவிட்டன" என்று அவர் தெரிவித்தார்.