டெல்லியில் விவசாயிகளுடன் கனிமொழி சந்திப்பு! பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதி
டெல்லியில் கடந்த 6 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை இன்று சந்தித்த திமுக எம்.பி.கனிமொழி, அவர்களது கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதி அளித்தார்.
டெல்லி: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சந்தித்தார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் நீரின்றி பயிர்கள் வாடியதால் மனமுடைந்த விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.40,000 கோடி நிவாரணத் தொகை இன்னும் கிடைக்கவில்லை. மேலும் நீர் ஆதாரங்களை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு தமிழக விவசாயிகள் மடிந்து வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தடுப்பணை
இந்நிலையில் பவானி ஆற்றில் கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. இதனால் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரிக்காக கர்நாடகத்திடம் கையேந்தி வரும் நிலையில், கர்நாடக அரசும் மேக்கேதாட்டு அணையை கட்டி வருகிறது.

கோரிக்கைகள் என்ன?
தற்போது வறட்சி ஏற்பட்டு வந்த நிலையில் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் உயிர் இழப்பதைத் தடுக்க தென்னிந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும், பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விளைப் பொருள்களை லாபகரமானதாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

100 நாள்கள் போராட்டம்
இந்நிலையில் இதற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காததால், தமிழகத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்திக்க யாரும் வரவில்லை
கடந்த 6 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மத்திய அரசு அதிகாரிகளும், தமிழக எம்பிக்களும் யாரும் சந்திக்க வில்லை என்று குற்றம்சாட்டு ஏற்பட்டது. அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகளை சந்திக்க யாரும் முன்வரவில்லை. டெல்லியில் உள்ள தன்னார்வலர்கள் விவசாயிகளுக்கு வேண்டிய மருந்துகள், உணவு ஆகியவற்றை அளித்து உதவி செய்து வருகின்றனர்.

கனிமொழி எம்.பி.சந்திப்பு
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் கோரிக்கை மனுவை விவசாயிகள் அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி பேசினார்.

நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்
அப்போது அவர் தெரிவிக்கையில், கடந்த 6 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இவர்களின் கோரிக்கைகள் குறித்தும், போராட்டம் குறித்தும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் எழுப்புவேன். மேலும் தங்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ சந்தித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் கூறியுள்ளது குறித்தும் உரியவர்களிடம் தெரிவிப்பேன்.

மத்திய அரசு மெத்தனம்
மீனவர் பிரச்சினை, நதி நீர் இணைப்பு, விவசாயிகள் தற்கொலை, மீத்தேன் வாயு உள்ளிட்டவற்றை நாம் சந்தித்து வருகிறோம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. ஒரு வேளை தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் நமது பிரச்சினைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்கலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications