சினிமா எடுக்க 29 இடங்களில் கை வரிசை காட்டிய தமிழக கும்பல்... ஆந்திராவில் கைது!
பெங்களூரு: சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசையில் 29 இடங்களில் கொள்ளையடித்த தமிழகத்தைச் சேர்ந்த கும்பலை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் வீடொன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது தலைமையிலான 3 பேர் கொண்ட கும்பலை அந்நகர போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் காட்சேகர் என்ற இடத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையில் ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்களை ஹைதராபாத் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின.

அதன் விபரமாவது:
திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் திருவாரூரைச் சேர்ந்த முருகன், தனது உறவினரான சுரேஷ், கூட்டாளியான தினகரன் ஆகியோருடன் இணைந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானாவில் தொடாந்து கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கொள்ளையடித்து சேர்த்த அந்த பணத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, இந்தக் கும்பல் தெலுங்குப் படம் ஒன்றையும் எடுத்துள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்த முருகன் தனது உறவினரான சுரேஷை வைத்து ரூ.50 லட்சம் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
4 மாநிலங்களில் உள்ள கிராமங்களையும் குறிவைத்து, இதுவரை கோடிக்கணக்கான பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கத்தை இந்தக் கும்பல் கொள்ளையடித்து வந்துள்ளது.
தொடர் கொள்ளை சம்பவங்களால் இந்தக் கும்பலைப் பிடிக்க ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இந்தக் கும்பல் காஞ்சிபுரம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், போலீசாரின் கையில் சிக்காமல் அவர்கள் தப்பிச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு கோடியே 72 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்பட 29 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளையடித்துள்ளனர். இவர்கள் மீது பெங்களூருவில் மட்டும் 25 வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்ற சில கொள்ளைச் சம்பவங்களிலும் இந்த கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அவர்களை தமிழக போலீசாரும் விசாரணைக்காக இங்கு அழைத்து வரலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications