"பைக்" வாங்குவதற்காக கட்டிய மனைவியை ரூ. 50,000க்கு விற்ற கணவர்!
பீ்ட்டல், மத்தியப் பிரதேசம்: பைக் வாங்குவதற்காக தனது மனைவியை ரூ. 50,000 விற்ற கணவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். அதேபோல அந்த நபரின் மனைவியை வாங்கிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
என்ன கொடுமை என்றால், இந்த பைக் நபர் தனது மனைவியை ஒருவரிடம் விற்றார். அவரை வாங்கிய நபரோ, இன்னொருவரிடம் அப்பெண்ணை விற்றுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் பீட்டல் என்ற ஊரில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அப்பெண் காணாமல் போய் விட்டார். நாட்கள் செல்லச் செல்ல அவரது பெற்றோர் கவலை அடைந்தனர், இந்த நிலையில் காணாமல் போன பெண், தனது தாய் மாமாவுக்குப் போன் செய்தார். தன்னை தனது கணவர் விற்று விட்டதாக அவர் கூறியதைக் கேட்டு தாய்மாமா அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோரிடம் விவரத்தைக் கூறினார். பெற்றோர் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் அந்தப் பெண்ணின் கணவரைத் தேடிப் போனார்கள். ஆனால் அவர் தப்பி விட்டார். இதையடுத்து அப்பெண் கொடுத்த தகவலின் பேரில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டை அடையாளம் கண்ட போலீஸார், குணா மாவட்டம் சசாதா என்ற இடத்தில் உள்ள வீட்டில் வைத்து பெண்ணைக் கண்டுபிடித்து மீட்டனர்.
விசாரணையின்போது அப்பெண்ணின் கணவர் அவரை ஜூன் 4ம் தேதி போபாலுக்கு அழைத்துச் சென்றார். கூலி வேலை பார்ப்பதற்காக தன்னுடன் வருமாறு கூறி அழைத்துப் போனார். அங்கு போனதும், தனது சகோதரரின் வீட்டில் குழந்தையை விட்டு விட்டு மனைவியை மட்டும் ராஜ்கர் பகுதிக்குக் கூட்டிச் சென்றார்.
அங்கு அரவிந்த் மீனா என்ற நபரிடம் தனது மனைவியை விற்றுள்ளார். பி்ன்னர் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பிப் போய் விட்டார். மீனா, அப்பெண்ணை தனது வீட்டில் அடைத்து வைத்தார். பின்னர் சசாதா கிராமத்தைச் சேர்ந்த திலீப் பாலிவால் என்பவரிடம் அப்பெண்ணை விற்றுள்ளார். பாலிவால் தனது வீட்டுக்கு அப்பெண்ணைக் கூட்டி வந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் அவரை சரமாரியாகவும் தாக்கியுள்ளார்.
சாதாரண பைக் வாங்குவதற்காக அப்பெண்ணின் கணவர் இந்த அட்டகாசத்தைச் செய்துள்ளார். தற்போது 3 பேருமே தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.