மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு வேண்டாம்.. மோடியை சந்தித்து திமுக எம்பி திருச்சி சிவா மனு
தமிழக மாணவர்களை ‘நீட்’ தேர்வில் இருந்து விடுவிக்கக் கோரும் மனுவை பிரதமர் மோடியை திமுக எம்பி திருச்சி சிவா நேரில் சந்தித்து அளித்தார்.
டெல்லி: இந்தியா முழுவதும் இந்த ஆண்டில் இருந்து மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர். இதில் இருந்து தமிழக மாணவர்களை விடுவிக்கக் கோரும் மனு ஒன்றை திமுக எம்பி திருச்சி சிவா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார்.
இதுகுறித்து திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் வாழ்கின்ற மாணவர்கள் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு சிரமத்தை தரக்கூடும். இந்தத் தேர்வு சிபிஎஸ்சி அடிப்படையில் நடக்கும் என்பதால் வட மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள்தான் அதிகம் இடம் பெறுவார்கள். எனவே, இந்தத் தேர்வு தேவை இல்லை என்று சட்டமன்றத்திலே ஒரு மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதா தற்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அவர் ஒப்புதல் அளித்த உடன் சட்டமாக மாறும். அதன் பின்னர் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு கிடைக்கும். நம் தமிழ்நாட்டு மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேரலாம்.
இதுதொடர்பான எந்த ஒரு அசைவும் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் அரசு என்று ஒன்று இருக்கின்றதா என்றே தெரியவில்லை. இங்கு நாற்காலி போட்டி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரிவான ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதியிருந்தார். அந்த கடிதத்தை நேரடியாக பிரதமரை சந்தித்து கொடுத்துள்ளேன். அதனைப் பெற்றுக் கொண்ட பிரதமர் பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார். மேலும், திமுக தலைவர் உடல் நிலை குறித்தும் செயல் தலைவர் குறித்தும் விசாரித்தார்.
இந்தியாவில் நிறைய மொழிகள் இருந்தாலும் ஒரு மொழிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. திமுகவின் நீண்ட நாள் கொள்கையாகிய அரசியல் சாசனத்தில் 8வது பிரிவின் கீழ் இருக்கின்ற மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்கினால் இந்த பேதம் மறையும். எல்லா மொழிகளை சேர்ந்தவர்களும் எங்களுக்கான அங்கீகாரம் இருக்கிறது. உரிமை இருக்கிறது என்ற உணர்வோடு நிச்சயமாக நிமிர்ந்து நிற்பார்கள் என்று சொன்னேன் என்று திருச்சி சிவா கூறினார்.