அது எப்படி சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கலாம்? திரிபுரா தலைமை வனக்காவலர் சஸ்பெண்ட்
அகர்தலா: சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் முதன்மை தலைமை வனக்காவலரை திரிபுரா அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது.
கடந்த 2014க்கு பிறகு, அதாவது மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாடு முழுவதும் மத கலவரங்கள், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த வரிசையில் மற்றொரு சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, திரிபுராவின் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12ம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சிங்கங்களுக்கு ஏற்கெனவே அக்பர், சீதா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால், சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும் என்று விஷ்வ இந்து பர்ஷித் (விஎச்பி) அமைப்பினர் அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
"அக்பர் முகலாய பேரரசராக இருந்தாலும், சீதா என்பவர் புராண இதிகாசங்களில் வரும் பெண் தெய்வமாக போற்றப்படுகிறார். இப்படி இருக்கும்போது இரண்டு சிங்கங்களையும் எப்படி ஒன்றாக விட முடியும்?" என்று கேள்வி எழுப்பி, பெண் சிங்கத்தின் பெயரை சீதா என்று இல்லாமல் வேறு பெயரை மாற்ற வேண்டும் என விஎச்பி அமைப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இது குறித்து விஹெச்பி நிர்வாகி துலால் சந்திர ரே கூறுகையில்,
"பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கத்திற்கு சீதா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் இந்து மதம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய பெயரை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆட்சேபனைக்குரிய சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும். வன விலங்குகளுக்கு இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும் தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டாம்" என்று சிலிகுரி பூங்கா மற்றும் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் முதன்மை தலைமை வனக்காவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில பாஜக அரசு பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications