திஹார் சிறையில் அடைக்கப்படுகிறாரா டிடிவி தினகரன்?
இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
கடந்த 17ஆம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தேகத்திற்கிடமாக தங்கியிருந்த சுகேஷ் சந்திர சேகரிடம் போலீசார் விசரணை நடத்தினர். அப்போது இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தர டிடிவி தினகரனிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் கடந்த சனிக்கிழமை முதல் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று 4வது நாளாக நடைபெற்ற விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகரும் டிடிவி தினகரனும் ஒரே அறையில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இன்று டிடிவி தினகரன் டெல்லி நிதமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் டிடிவிதினகரனுக்கு அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.