துவேஷப் பேச்சு.. கைதாகிறார் மோடியின் வலது கரம் அமீத் ஷா -முன்ஜாமீன் கோருகிறார்
லக்னோ: பாஜகவின் உ.பி. மாநிலப் பொறுப்பாளரும், முன்னாள் குஜராத் அமைச்சரும், சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடையவரும், நரேந்திர மோடியின் வலது கரமுமான அமீத் ஷா மீது உ.பி. மாநிலப் போலீஸார் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அமீத் ஷா முன்ஜாமீன் கோரி கோர்ட்டை அணுகியுள்ளார்.
அமீத் ஷா மீது பிஜ்னோர் மற்றும் ஷாம்லி ஆகிய இரு இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜாட் இனத்தவர் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று பேசிய துவேஷப் பேச்சுக்காக இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து உ.பி. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், அமீத் ஷா மீது ஐபிசி 153 ஏ மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ன் கீழ் பிஜ்னோரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஜ்னோர் மாவட்ட கலெக்டர் பூபேந்திர செளத்ரி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
செளத்ரி இதுகுறித்து விளக்குகையில், அமீத் ஷா பேசிய பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஷாம்லியிலும் இதேபோன்ற வழக்குப் பதிவு செய்ய்பட்டுள்ளது. அதே இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
என்ன பேசினார் ஷா...?
ஷாம்லி மற்றும் பிஜ்னோரில் ஷா பேசுகையில், கடந்த ஆண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போனவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்காக ஜாட் இனத்தவர்கள் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
எந்த நேரத்திலும் கைது
ஷா மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது கைது தவிர்க்க முடியாதது என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று பேசிய காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் மீதும் இதே பிரிவன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
முன்ஜாமீன் கோருகிறார்
இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி கோர்ட்டை நாடியுள்ளார் அமீத் ஷா.












Click it and Unblock the Notifications